தீக்குளிப்பு போராட்டத்தால் கொடுமைக்கார கணவனை சிறைக்கு அனுப்பிய கலியுக கண்ணகி…
சென்னை: கணவரின் கொடுமை தாங்காமல் தீக்குளிப்பு போராட்டம் நடத்தி கணவரை சிறைக்கு அனுப்பிய இளம்பெண்ணால் சென்னையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு இளம்பெண் ஒருவர் உடலில் கெரசின் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தார்.
அவரது கோரிக்கையை ஏற்று போலீசார் அவரது கணவரை கைது செய்து சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம்:
சென்னை ராயப்பேட்டை, அங்கமுத்து நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் கவிதா. இவர் நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் தனது தாயார் வசந்தி, உறவினர் சந்துரு ஆகியோருடன், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.
தீக்குளிக்க முயற்சி:
திடீரென்று கமிஷனர் அலுவலக வாசலில் கவிதா பாட்டிலில் கொண்டு வந்திருந்த கெரசினைத் தனது உடலிலும், தனது தாயார் வசந்தி, உறவினர் சந்துரு உடலிலும் ஊற்றினார். பின்னர் அவர்கள் 3 பேரும் சேர்ந்து தீக்குளிக்க முயன்றனர். அங்கு காவலுக்கு நின்ற போலீசார், தீக்குளிக்க விடாமல் அவர்களை தடுத்தனர்.
கண்ணீர்க் கதை:
அப்போது கவிதா கல்நெஞ்சையும் கரைய வைக்கும் தனது கண்ணீர் கதையை போலீசாரிடம் தெரிவித்தார். தனது கணவர் செந்தில்குமார் தன்னை தினந்தோறும் அடித்து கொடுமை படுத்துவதாக தெரிவித்தார்.
நாத்தனார் கொடுமை:
மேலும், தனது நாத்தனாரின் கணவர் ரவிக்குமார் , தனக்கு சொந்தமான நகைகளை அபகரித்து கொண்டதாகவும், அவர்களால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கவிதா புகார் கூறினார்.
வன்கொடுமை வழக்கு:
அவரது புகாரின்படி அண்ணாசாலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதம் வரதட்சணை கொடுமை மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கணவர் கைது:
கவிதாவின் கணவர் செந்தில்குமாரும், கவிதாவின் நாத்தனார் கணவர் ரவிக்குமாரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நீதிமன்ற காவலில் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.