எனக்கு 67 உனக்கு 32...: 'முதல்மரியாதை' கள்ளக்காதலுக்கு எதிராக வழக்கு போட்ட மனைவி
சென்னை: 32 வயது பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக 67 வயது கணவர் மீது அவரது மனைவி புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரின் பேரில் அந்த இருவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதவ மோகனும், அவரது கள்ளக்காதலியும் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
சென்னை புதுப்பேட்டையை சேர்ந்தவர் மாதவமோகன்,67. இவரது மனைவி ஆனந்தி, சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸில் கொடுத்த புகாரில், ‘என் கணவருக்கு 32 வயது பெண்ணுடன் கள்ளத்தொடர்பு உள்ளது. இதை நேரில் பார்த்த நான் தட்டிக்கேட்டேன்.
இதையடுத்து, அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தினர். மேலும் அந்தப் பெண்ணின் கணவர் பெயருக்கு சொத்துகளை என் கணவர் எழுதி வைத்துள்ளார். எனவே, என் கணவர் மற்றும் அந்தப்பெண் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும்' என்று அதில் கூறியிருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் மாதவமோகன் மற்றும் அந்த 32 வயது பெண் மீது போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் இருவரும் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி கே.கல்யாண சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக் கறிஞர் அருண் அன்புமணி தனது வாதத்தில், மனுதாரர் மாதவ மோகனுக்கு 67 வயதாகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக அவரது மனைவி பொய் புகார் கொடுத்துள்ளார் என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வழக்கறிஞர் முகமது ரியாஸ் மற்றும் ஆனந்தி தரப்பு வழக்கறிஞர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதிபதி, மனுதாரர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை பரிசீலிக்கும்போது, அவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது'' எனக்கூறி முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தார்.