கொடைக்கானலில் பெரும் காட்டுத்தீ! ஆயிரக்கணக்கான மரம், மூலிகைகள் நாசம்! விலங்குகள் வெளியேறும் அபாயம்!
கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகும் நிலையில் வனவிலங்குகள் குடியிருப்புகள் நுழைந்து விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கோடை காலம் நெருங்கினாலே இந்தியாவின் பல வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல.
தமிழகத்தில் ஆண்டுதோறும் காட்டுத்தீ தடுப்பு நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் ஆங்காங்கே சில இடங்களில் காட்டுத்தீ ஏற்படுகிறது. தற்போது கொடைக்கானல மலைப்பகுதிகளில் காட்டுத்தீ பரவி வருகிறது.

கொடைக்கானலில் காட்டுத்தீ
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பெருமாள்மலை வனப்பகுதி உள்ளது. இங்கு தோகைவரை, மயிலாடும்பாறை, மச்சூர் உள்ளிட்ட வனப்பகுதிகளும் இருக்கின்றன. இந்நிலையில் சில நாட்களாக மச்சூர் மற்றும் அதனை சுற்றிய வனப்பகுதியின் ஆங்காங்கே காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த தீயில் பல ஏக்கர் பரப்பளவில் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தினர்.

தொடரும் தீ
இந்த நிலையில் கொடைக்கானல் அருகே கூக்கால், பழம்புத்தூர் கிராமங்களையொட்டிய வனப்பகுதியில் காட்டுத்தீ எரிந்து வருகிறது. இதனால் அரிய வகை மூலிகை செடிகள், மரங்கள், புல்வெளிகள் என கருகி நாசமாகின்றன. தீயைக் கட்டுப்படுத்துவதில் வனத்துறையினர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

மக்கள் அச்சம்
இதுபற்றி அங்கு வசிக்கும் மக்கள் கூறுகையில், ‛‛வனப்பகுதிகள் தொடர்ச்சியாக தீப்பற்றி எரிகின்றன. இதனால் விலையுயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின. மேலும் வனவிலங்குகளும் பலியாகின்றன. இதுமட்டுமின்றி வனவிலங்குகள் காடுகளில் இருந்து குடியிருப்புக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்துறையினர் காட்டுத்தீயை விரைவாக அணைத்து தீத்தடுப்பு முன்னெச்சரிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். தற்போதைய தீவிபத்துக்கும் தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை மேற்கொள்ளாதது தான் காரணமாக இருக்கலாம். தற்போது ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி பரவிவரும் காட்டுத்தீயை வனத்துறையினர் கட்டுப்படுத்தாவிடில் அரியவகை மூலிகைச் செடிகள், மான் மற்றும் புலிகள், யானைகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது'' என்றனர்.

சுற்றுலா பயணிகள் அதிகரிப்பு
இதற்கிடையே இன்று விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் அதிகமாக படையெடுத்தனர். மோயர் சதுக்கம், பைன் மரச்சோலை, தூண் பாறை, பசுமைப் பள்ளத்தாக்கு, பிரையண்ட் பூங்கா போன்ற பகுதிகளில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இவர்கள் ஏரிச்சாலைப் பகுதியில் சைக்கிள் சவாரி, குதிரைச்சவாரி மற்றும் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.











Click it and Unblock the Notifications