மோடி ஆட்சியில் தவறு நடந்தால் சுட்டிக் காட்டுவோம்... வைகோ உறுதி
விருதுநகர்: மோடி ஆட்சியில் தவறு நடந்தால் அதனை சுட்டிக் காட்டுவோம் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுடன் மதிமுக கூட்டணி அமைத்தது. தேர்தல் முடிவுகளின் படி பாஜக அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. மோடி பிரதமராக பதவியேற்ற விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வருகை தந்திருந்தார். இதற்கு மதிமுக தனது எதிர்ப்பைத் தெரிவித்தது. இதனால் தமிழக பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாக சலசலப்பு உண்டானது.
இந்நிலையில், விருதுநகரில் ம.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கும் கள ஆய்வுப்பணிக்காக வந்திருந்த வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது மோடி அரசில் நடக்கும் தவறுகளை தங்கள் கட்சி சுட்டிக் காட்டும் என அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:-
களப்பணி...
கட்சியை வலுப்படுத்த கள ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் தனித்தனியாக சந்தித்து பிரச்சினைகள் பற்றி பேசுகிறேன்.
கங்கை வெள்ளம் போல்...
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் கங்கை வெள்ளம் போல் பணம் கொட்டப்பட்டது. இந்த தொகுதியில் கொடுக்கப்பட்ட பணம், இலவசங்கள் ஆகியவற்றையும் மீறி 2 லட்சத்து 61 ஆயிரம் வாக்குகள் பெற்றோம்.
கைக்காசு...
வெற்றி பெற்றவர்கள் செலவழித்த பணத்தில், ஒரு சதவீதத்தை கூட எங்களால் செலவு செய்ய முடிய வில்லை. கட்சித் தொண்டர்கள் அவர்கள் கையில் இருந்து செலவு செய்தார்கள்.
வாழ்வாதாரம்...
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்காக ம.தி.மு.க. லட்சியத்தோடும், நேர்மையோடும், நாணயத்தோடும் பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ம.தி.மு.க. தொடர்ந்து போராடும்.
சுட்டிக் காட்டுவோம்...
தனிப்பெரும்பான்மை பெற்று பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி அமைத்துள்ளார். தேர்தலுக்கு முன்பே இதை நான் உறுதிபட கூறினேன். ஏழை, எளிய மக்களுக்கு தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை நிறைவேற்றுகிறார். மக்களுக்கு திட்டங்களை செயல்படுத்தும்போது பாராட்டுகிறோம். அதே நேரத்தில் அரசின் செயல் பாட்டில் ஏதேனும் தவறு இருந்தால் அதை சுட்டிக் காட்டுவோம்.
நம்பிக்கை....
கடந்த ஆட்சி காலத்தில் பல்வேறு தவறுகள் நடந்துள்ளன. இதை சரிசெய்ய வேண்டிய பொறுப்பு பிரதமர் நரேந்திரமோடிக்கு உள்ளது. அவர் இந்த பொறுப்பை மிக சரியாக செய்வார் என நம்புகிறேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கட்சி வளர்ச்சி....
இதைத்தொடர்ந்து விருதுநகர்-அருப்புக்கோட்டை ரோட்டில் உள்ள அனுமான் திருமண மண்பத்தில் நடந்த தொண்டர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைகோ, தொண்டர்களையும், நிர்வாகிகளையும் தனித் தனியே சந்தித்து அவர்களிடம் கட்சி வளர்ச்சி மற்றும் இதர பிரச்சினைகள் குறித்து விவரங்கள் கேட்டு அறிந்தார்.