"அம்மா"வுக்கு கஷ்டம் வராமல் இருக்க அதிமுகவினர் "கப்சிப்"பாக இருக்க வேண்டியது அவசியம்!
சென்னை: கடந்த முறை ஜெயலலிதா ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியபோது, உங்களது கட்சிக்காரரிடம் (ஜெயலலிதா) சொல்லி அவரது கட்சிக்காரர்களை (அதிமுகவினர்) அமைதியாக இருக்கச் சொல்லுங்கள் என்று ஜெயலலிதாவின் வக்கீலான பாலி நாரிமனிடம் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது. எனவே நாளைய தீர்ப்பைத் தொடர்ந்து அதிமுகவினர் வன்முறையிலோ, வேறு தகாத செயலிலோ ஈடுபட்டாலோ அது ஜெயலலிதாவுக்கு மீண்டும் ஜாமீன் தருவதற்குப் பாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. அப்போது சுப்பிரமணியசாமி தரப்பில், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு மக்களின் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது.

இதைக் கேட்டுக் கொண்ட உச்சநீதிமன்றம் ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலி நாரிமனிடம், தனது கட்சிக்காரர்களை ஜெயலலிதா அறிவுறுத்தி அமைதியாக இருக்கச் சொல்வார் என்று நம்புகிறோம் என்று கூறியிருந்தது.
பெங்களூரு தனி நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை விமர்சித்து தமிழகத்தில் பல இடங்களில் அவருக்கு எதிரான போராட்டங்களில் அதிமுகவினர் ஈடுபட்டனர். மேலும் அவரது கொடும்பாவி எரிக்கப்பட்டது. அவரை கண்டித்து வேலூர் மாநகராட்சியில் தீர்மானமும் போட்டு பரபரப்பைக் கூட்டினர்கள். மேலும் தமிழகம் முழுவதும் நடந்த அதிமுகவினர் போராட்டம் காரணமாக பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு மக்கள் அவதிக்குள்ளானார்கள் என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் நாளை கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் மனு மீதான தீர்ப்பு வரவுள்ளது. மேலும் நாளை மறு நாள் ஜெயலலிதாவின் ஜாமீனை நீட்டிப்பது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரவுள்ளது.
எனவே நாளைய தீர்ப்பில் ஜெயலலிதாவுக்கு பாதமாக ஏதாவது வந்தால், அதிமுகவினர் மீண்டும் வன்முறையில் ஈடுபடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அவர்கள் வன்முறையில் ஈடுபட்டு கடந்த முறை போல ஏடாகூடமாக நடந்தால் அது உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கலை ஏற்படுத்தி விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications