ஆ... அப்படியா சொன்னார் துரைமுருகன்?
சென்னை: வருகிற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது பாருங்கள். அதிமுக ஆட்சி கவிழப் போவதைப் பார்ப்பீர்கள் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கூறியதாக ஒரு பரபரப்பு கிளம்பியுள்ளது டெல்லி வட்டாரத்தில்.
தமிழக அரசியல் நிலவரம் கலவரமாகி என்ன நடக்கிறது என்றே தெரியாத நிலை ஏற்பட்டு பல காலமாகி விட்டது. யார் நண்பர்கள், யார் விரோதிகள் என்றெல்லாம் இப்போது பாகுபாடு கிடையாது. ஒன்னுமண்ணாக அனைவரும் கலந்து விட்டனர்.
இந்த நிலையில் விரைவில் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு சிக்கல் வரும் போலத் தெரிகிறது. அதுதொடர்பான திரைமறைவு வேலைகள் சூடு பிடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டசபை ரகளை
சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது நடந்த ரகளைகள் குறித்தும் வாக்கெடுப்பை ரத்து செய்துவிட்டு ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சமீபத்தில் சந்தித்து முறையிட்டார் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.
சரமாரி கேள்விகள்
இதற்கான டெல்லி பயணத்தில் ஸ்டாலினுடன் துரைமுருகன், திருச்சி சிவா, டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் சென்றிருந்தனர். சந்திப்பு முடிந்ததும் வெளியே வந்த தி.மு.க. வி.ஐ.பி.க்களிடம் டெல்லிவாழ் திமுகவினர் சிலர் பேசிக்கொண்டிருந்தனர்.
தவற விட்டுட்டோமே
அப்போது, அப்பல்லோவில் ஜெயலலிதா அட்மிட்டான பிறகும் அவரது மறைவை அடுத்தும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு திமுகவுக்கு இருந்தும் அதை தவறவிட்டுவிட்டோமே, ஏன்? என்கிற ரீதியில் துரைமுருகனிடம் விவாதித்துள்ளனர்.
அதை விடுங்கப்பா இனிமேதான் மேட்டரே!
அதற்கு அவர், அதற்குப் பல காரணங்கள் இருக்கு. அதை விடுங்கள். ஆனா, பட்ஜெட் கூட்டம் நடந்து முடிவதற்குள் 10 எம்.எல்.ஏ.க்கள் நம் பக்கம் வந்துவிடுவார்கள். பொருத்திருங்கள் என சொல்லியிருக்கிறார் துரைமுருகன்.
என்ன நடக்கப் போகிறது?
துரைமுருகன் இப்படிக் கூறியிருப்பதாக வந்துள்ள செய்திகளைப் பார்க்கும்போது ஆக, சில ரகசிய மூவ்களை திமுக நடத்திக் கொண்டிருப்பதாகவே சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இது எதில் போய் முடியும், இது திமுகவுக்கு எந்த அளவுக்கு பலன் தரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.