ஹரியானா முதல் குஜராத் வரை.. ஜாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாஜக!
டெல்லி: பல்வேறு மாநிலங்களிலும் வரிசையாக, 'ஜாதி பெரும்பான்மை' அரசியலை புறம் தள்ளியபடியே முன்னுதாரணம் காட்டி வருகிறது பாஜக.
பாஜக மீது மதவாத குற்றச்சாட்டுகள் ஒருபக்கம் இருந்தாலும், ஜாதி அரசியலை அக்கட்சி ஒதுக்கி வருவது அக்கட்சி ஆளும் பல மாநிலங்களில் ஊர்ஜிதமாகியுள்ளது.
பொதுவாக ஜாதி ஒழிப்பை அடிப்படை கொள்கையாக கொண்ட திராவிட கட்சிகளே தொகுதியில் எந்த ஜாதிக்கார வாக்காளர்கள் அதிகம் உள்ளார்களோ, அந்த ஜாதியை சேர்ந்தவரைத்தான் வேட்பாளர்களாக்குவதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.

அமைச்சரவையிலும் ஜாதி
தமிழக அமைச்சரவையிலும் கூட திறமைக்கு மரியாதை உள்ளதோ இல்லையோ, ஜாதி பெரும்பான்மை பலத்தை காட்டும் இடமாகத்தான் அது மாறிவிடுகிறது. இந்த ஜாதிக்கு இத்தனை இடங்கள் என்று கூறுபோட்டு பகிர்ந்தளிக்கப்படுகிறது.

வித்தியாசம்
ஆனால், மாநிலத்தின் பெரும்பான்மை ஜாதிபிரிவினரை தவிர்த்துவிட்டு, முதல்வர்களை தேர்ந்தெடுத்து வருகிறது பாஜக. எதேர்ச்சையாக ஏதோ ஒன்றிரெண்டு மாநிலங்களில் நடக்கவில்லை. வரிசையாக இந்த மாற்றங்கள் பல மாநிலங்களில் நடந்து, கடைசியாக குஜராத்திலும் அதுவே நடந்துள்ளது.

ஜாட்கள் எதிர்ப்பை மீறி பஞ்சாபி
பாஜக ஆளும் ஹரியானாவில் முதல்வராக உள்ளவர் மனோகர் லால் கட்டா. இவர் பஞ்சாபி இனத்தை சேர்ந்தவர். பொதுவாக ஹரியானாவில் ஆதிக்க ஜாதிகளாக உள்ள ஜாட் இனத்தவர்களுக்கே முதல்வர் பதவி தரப்படும் நிலையில், அவர்கள் எதிர்ப்பை மீறி மனோகர் லால் கட்டா, முதல்வராக்கப்பட்டார்.

மராட்டியருக்கு இல்லை
மகாராஷ்டிராவில் மராட்டிய இனத்தவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். பிராமண ஜாதியினருக்கு அங்கு எந்த ஆதிக்கமும் இல்லை. பாஜக அரசு பொறுப்பேற்கும் முன்பு நடந்த காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சர்களில் கூட ஒருவரும் பிராமணர் சமூகத்தவர்கள் கிடையாது. ஆனால், பாஜகவோ, பிராமணரான தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்கியது.

முதலாவது வேறு ஜாதி முதல்வர்
சட்டீஸ்கர், அதிகமாக மலைவாழ் ஜாதியினர் வாழும் மாநிலம். வாக்கு வங்கி அவர்களே. ஆனால் பிற்படுத்தப்பட்ட ஜாதி பிரிவான 'தெளி' என்ற ஜாதியை சேர்ந்த ரகுபர் தாஸ் முதல்வராக்கப்பட்டார். சட்டீஸ்கரின் முதலாவது மலைவாழ் ஜாதி தவிர்த்த முதல்வர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு.

பிடிவாதம்
இப்போது குஜராத்தில், பட்டேல் இனத்தவர்கள் பெரும் போராட்டங்களை நடத்திய நிலையிலும், அடுத்த வருடத்தில் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலையிலும், தனது கொள்கையை தளர்த்தாத பாஜக, பெரும்பான்மையாக உள்ள பட்டேல் சமூகத்தை சேர்ந்தவருக்கு முதல்வர் பதவியை தராமல், இந்தியா முழுக்க வெறும் 0.37 சதவீதமே உள்ள ஜெயின் சமூகத்தை சேர்ந்த விஜய் ருபனியை முதல்வராக்கியுள்ளது.

பிற கட்சிகளும் செய்யனுமே
ஜாதிய லாபிகளை உடைத்தெறியும் போக்கை பாஜகவும் அதைப்போல பிற கட்சிகளும் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பது சம நோக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. அதேநேரம், பாஜக இதை ஆத்மார்த்தமாக செய்ததா, அல்லது தனி நபர்கள் செல்வாக்கை முன்னிருத்தியதா என்பது அதன் தலைமைக்கே வெளிச்சம். உளப்பூர்வமாக இதை செய்திருந்தால் சபாஷ் சொல்வதில் தப்பில்லை.












Click it and Unblock the Notifications