வேலூரில் முஸ்லீம் லீக்குடன் மோதும் பாஜக!
சென்னை: இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக தனது வேட்பாளரை களம் இறக்குகிறது.
இங்கு திமுக கூட்டணி சார்பில் ஏற்கனவே இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சி போட்டியிடுகிறது என்பது நினைவிருக்கலாம்.
பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கான தொகுதிகளை இன்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தார். அதன்படி வேலூர் தொகுதியில் பாஜக போட்டியிடுகிறது.
வேலூர் தொகுதி இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள தொகுதியாகும். அதேசமயம், இங்கு வன்னியர்கள், முதலியார் உள்ளிட்ட பிற இந்து சமூக வாக்காளர்களும் கணிசமான அளவில் உள்ளனர்.
திமுக அணியில் முஸ்லீம் லீக் இங்கு மோதும் நிலையில் பாஜகவே நேரடியாக களத்தில் குதித்துள்ளது.
வேலூரில் நடந்த சில இந்து அமைப்புகளின் தலைவர்கள் கொலைகளால் ஏற்பட்ட அனுதாபத்தை ஆதாயமாகக் கருதி பாஜக இந்த நேரடி மோதலில் குதித்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வேலூரில் தற்போது அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் ஆகிய முக்கியக் கட்சிகள் மோதவுள்ளன.
2002ம் ஆண்டு இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள வாணியம்பாடி சட்டசபைத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் திமுகவின் நாகூர் அனீபாவை எதிர்த்து ஆர்.வடிவேலுவை நிற்க வைத்து ஜெயலலிதா ஜெயிக்க வைத்தார். அப்போது தேசிய லீக் தனித்துப் போட்டியிட்டு வாக்குகளைப் பிரித்ததும் குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதாவின் அதே பாணியை இப்போது பாஜகவும் கையில் எடுத்துள்ளது. ஆனால், இம்முறை இந்திய தேசிய முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.