அனைவரையும் அரவணைத்து செல்கிறார்... ஸ்டாலினுக்கு சுப்பிரமணியன் சாமி பாராட்டு
சென்னை : அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்வதாக திமுக பொருளாளர் ஸ்டாலினைப் பாராட்டிய பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா மீது சரமாரி குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
மு.க.தமிழரசுவின் மகன் அருள்நிதியின் மகன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காக பாஜக தலைவர் சுப்பிரமணியன் சாமியை சென்னை இல்லத்தில் நேரில் சந்தித்தார் திமுக பொருளாளர் ஸ்டாலின்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டாலின், ‘ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்றால் மட்டுமே, மக்களுக்கு உண்மை தெரிய வரும்' என்றார். மேலும், இது தொடர்பாக ஏற்கனவே திமுக தலைவர் கருணாநிதி கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
பின்னர், செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ‘ஜெயலலிதா வழக்கில் வழங்கப்பட்டது மோசமான தீர்ப்பு' என்றார். மேலும், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யத் தவறினால், தான் அதனைச் செய்யும் முடிவில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேபோல், ஜெயலலிதா மீது தனக்கு தனிப்பட்ட முறையில் அதிக கோபம் இருப்பதாகவும், தொடர்ந்து தன்னைப் பற்றி பிரதமர் மோடிக்கு அவர் புகார் கடிதம் எழுதியதாகவும் அவர் கூறியுள்ளார். தான் மாணவர் இல்லை என்றும், மோடி பிரின்சிபல் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து கூறுகையில், ‘அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்கிறார் ஸ்டாலின்' என சுப்பிரமணியன் சாமி பாராட்டினார்.












Click it and Unblock the Notifications