காங்-தே.மு.தி.க. கூட்டணியா?: திமுகவுடன் கூட்டணியா?- ஞானதேசிகன்
சென்னை: திமுகவுடன் கூட்டணி குறித்த யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து காங்கிரஸ் விருப்ப மனு பெறப்படுகிறது. இன்று மாலையுடன் இது முடிவடைகிறது. மனுக்கள் அனைத்தும் நாளை மாநில தேர்தல் குழு ஆய்வு செய்து நாளை மறுநாள் டெல்லி தலைமை தேர்தல் குழுவிடம் ஒப்படைக்கப்படும்.

நாங்கள் இப்போது கூட்டணி பற்றி யோசிக்கவில்லை. 39 தொகுதிகளுக்கும் மனு வாங்குகிறோம். தே.மு.தி.க. காங்கிரசுடன் கூட்டணி சேருமா? என கேட்கிறார்கள். பல கட்சிகளுடன் பேச்சு நடக்கிறது. பொதுவாக கூட்டணி பேச்சு விஷயங்களை அறைக்குள்தான் பேச முடியும். அம்பலத்தில் சொல்ல முடியாது.
எந்தெந்த கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று எல்லா கட்சிகளுமே காய்களை நகர்த்தி வருகிறது.
விஜயகாந்தையும் தேமுதிக எம்எல்ஏக்களையும் சந்திக்க பிரதமர் மன்மோகன் சிங் நேரம் ஒதுக்கியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் இந்த சந்திப்பு நடைபெறும். ஆனால், பிரதமருடன் விஜயகாந்த் என்ன பேசுவார் என எனக்கு தெரியாது.
தமிழக தேர்தல் பிரசாரத்துக்கு சோனியா, ராகுலை அழைத்துள்ளோம். மார்ச் மாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
நரேந்திர மோடி கூட்டத்தில் பல கட்சி தலைவர்கள் வரப் போகிறார்கள் என்று சொன்னார்கள். ஆனால் யாரும் வரவில்லை. மோடி மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை மறு எண்ணிக்கை அமைச்சர் என்று பேசியது மிகவும் அநாகரிகமானது.
திமுகவுடன் கூட்டணி குறித்த யூகங்களுக்கு பதில் அளிக்க முடியாது என்றார் ஞானதேசிகன்.












Click it and Unblock the Notifications