மோடியை பின்பற்றி மத்திய அரசிடம் புதுச்சேரிக்காக போராடுவேன்- நாரயணசாமி
புதுச்சேரி: குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி இருந்தபோது, மத்திய அரசிடம் சண்டையிட்டு திட்டங்களுக்கான நிதியைப் பெற்றுச் செல்வார். அதுபோல, மோடியை பின்பற்றி மத்திய அரசிடம் போராடுவேன் என்று புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி அரசு சார்பில் காமராஜரின் 114-வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேரு வீதியில் உள்ள காமராஜர் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்களும் மரியாதை செலுத்தினர்.
முன்னதாக புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கட்சித் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் தலைமையில் காமராஜர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:

கமிஷன் அடிக்கக் கூடாது
காமராஜர் இறக்கும்போது 4 வேஷ்டி, சட்டை மட்டுமே இருந்தது. ஆனால், தற்போதுள்ள அரசிலுக்கு வருபவர்கள் கொள்ளையடிப்பதை நோக்கமாகக் கொண்டுதான் பதவிக்கு வருகின்றனர். அனைத்துக்கும் கமிஷன் பேசுவதால் தான், அவர்கள் வந்த வேகத்திலேயே காணாமல் போகின்றனர். அரசியல்வாதிகளுக்கு தியாக மனப்பான்மை வேண்டுமே தவிர கமிஷன் அடிக்கும் எண்ணம் இருக்கக் கூடாது.

பல்வேறு துறைகளில் ஆய்வு
புதுச்சேரியில் காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பேற்று 40 நாட்கள் ஆகிறது. இந்த காலகட்டத்தில் பல்வேறு துறைகளுக்குச் சென்று நாங்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். தினமும் 4 அல்லது 5 மணிநேரம்தான் தூங்கவே முடிகிறது. புதுச்சேரியின் வளர்ச்சிக்காக நானும், அமைச்சர்களும் அந்த அளவுக்கு பணியாற்றி வருகிறோம்.

கடந்த ஆட்சியில் டம்மி அமைச்சர்கள்
புதுச்சேரியில் கடந்த ஆட்சியின் போது அமைச்சர்கள் வெறும் டம்மியாக இருந்தனர். முதல்வரின் முன்பு அமைச்சர்கள் கைகட்டி நின்றால், அதிகாரிகள் அமைச்சர்களை எப்படி மதிப்பார்கள்? ஆனால் கடந்த கால ஆட்சியைப்போல அல்லாமல் தற்போது காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சர்கள் சுதந்திரமாக செயல்பட அனுமதி அளித்துள்ளோம்.

செங்கல்பட்டு வரை தான் செல்வார்கள்
கடந்த ஆட்சியின் போது அவர்கள் டெல்லிக்கே சென்றது கிடையாது. செங்கல்பட்டு வரை போய்விட்டு அப்படியே திரும்பிவிடுவர். ஆனால், நாங்கள் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து பேசியிருக்கிறோம். இதன் மூலம் மத்திய அரசு நமது தேவைகளை பூர்த்தி செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

மோடியை பின்பற்றுவேன்
முன்னதாக குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி, மத்திய அரசிடம் போராடி நிதிகளை பெற்றுச் செல்வார். அதேபோல நானும் அவரை பின்பற்றி புதுச்சேரியின் தேவைக்ககாக மத்திய அரசிடம் போராடுவேன் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications