500 கடைகளை மூடுவதால் அரசுக்கு நஷ்டமில்லையாம்.. ஆனால் மக்களுக்கு லாபம்தானே!
சென்னை: 500 டாஸ்மாக் கடைகளை மூடும் அரசின் உத்தரவால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு இருக்காது என்று டாஸ்மாக் தரப்பில் கூறப்படுகிறது. அதேசமயம், 500 கடைகளுடன் நில்லாமல் படிப்படியாக அத்தனை கடைகளையும் மூட முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுத்துள்ளது.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக முழு மது விலக்கு குறிக்க கோரிக்கைகள் பெரும் வேகமெடுத்தன. போராட்டங்களும் வெடித்தன. காந்தியவாதி சசிபெருமாள் பரிதாபமாக தனது உயிரையும் இழந்தார். இந்த நிலையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் படிப்படியாக மது விலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்தது.
இது கடும் கண்டனத்திற்கும், விமர்சனத்துக்கும் உள்ளானது. முழுமையான மது விலக்கை அதிமுக அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. மேலும் ஜெயலலிதா இந்த விஷயத்தை பெரிதாக கண்டு கொள்ள மாட்டார் என்ற பேச்சும் நிலவி வந்தது. இந்த நிலையில் நேற்று முதல்வராகப் பொறுப்பேற்று ஆட்சியில் அமர்ந்ததும் முதல் கையெழுத்தாக 500 மதுக் கடைகளை மூடவும், கடை திறக்கும் நேரத்தை 2 மணி நேரம் குறைத்தும் அதிரடியாக உத்தரவிட்டார் ஜெயலலிதா.

நம்பிக்கை தரும் நடவடிக்கை
ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை மது கொடுமைக்கு எதிராக போராடி வருவோருக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது. முதல்வரின் நடவடிக்கை நம்பிக்கை தரும் வகையில் உள்ளதாகவும், ஆனால் இத்தோடு நின்று விடாமல் படிப்படியாக அத்தனை கடைகளையும் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

நஷ்டம் பெரிதாக இருக்காதாம்
இதற்கிடையே, 500 கடைகளை மூடுவதால் அரசுக்குப் பெரிய இழப்பு ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 6800க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தக் கடைகள் மூலமாக தினசரி ரூ. 80 கோடி வரை அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.

ரூ. 20,000 கோடி வருமானம்
டாஸ்மாக் கடைகள் மூலமாக அரசுக்கு ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ. 20,000 கோடிக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. தற்போது கடையின் நேரம் குறைக்கப்பட்டாலும் கூட குடிக்க வருவோர் எண்ணிக்கை குறையாது என்றே சொல்லப்படுகிறது.

வருவாய் தராத கடைகள்தான் மூடல்
அதேபோல 500 கடைகளை மூடுவதாலும் நஷ்டம் பெரிதாக இருக்காதாம். காரணம், மூடப்படும் கடைகள் அதிக வருவாய் தராத கடைகள்தான் என்று சொல்கிறார்கள். இந்த கடை மூடலால் இழப்பு என்பது, அதிகபட்சம் ஒரு நாளைக்கு ரூ. 1 கோடி வரை மட்டுமே இருக்கும் என்கிறார்கள்.

மக்கள் எதிர்பார்ப்பு இவ்வளவுதான்!
அதேசமயம், கடைகள் மூடுவதால் வருமானம் குறைகிறதோ இல்லையோ, மக்களுக்கு நிச்சயம் நல்லது நடக்கும். எனவே இந்த 500 கடைகளுடன் நில்லாமல் தொடர்ந்து இதை படிப்படியாக அதிகரித்து ஆட்சி முடிவதற்குள் கடைகளே இல்லாத நிலையை ஜெயலலிதா ஏற்படுத்த வேண்டும் என்பது பொதுமக்களின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications