அக்குவேறு ஆணி வேறாக பிரித்து மேயும் அதிகாரிகள்... ரெய்டில் சிக்குமா ஜெ. மருத்துவமனை புகைப்படங்கள்?
சசிகலா குடும்பத்தினர் வீட்டில் சோதனை நடத்தி வரும் அதிகாரிகளிடம் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது எடுத்த புகைப்படம், வீடியோ கிடைக்குமா என்ற ஆவல் எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை : சசிகலா குடும்பத்தினரை பிரித்து மேய்ந்து வரும் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் வீடியோ, புகைப்படம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்திலேயே முதன்முறையாக ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தில் 3 மாநிலங்களில் ஆயிரக்கணக்கான வருமான வரித்துறையினர் சோதனையில் இறங்கியுள்ளனர். ஒரு சில இடங்களில் வருமான வரி சோதனை முடிந்த நிலையில், பல இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நீடிக்கிறது.
தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சோதனையில் சசிகலா குடும்பத்தினருக்கு நெருக்கமானவர்கள், ஜோதிடர்கள், மர வியாபாரி என்று ஒருவரையும் விட்டுவிடாமல் தோண்டித் துருவி வருகின்றனர் அதிகாரிகள். இதே போன்று ஜெயா டிவியின் சிஇஓ விவேக் வீட்டிலும் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.
எடப்பாடியை விமர்சித்த சசி குடும்பம்
இளவரசியின் மகன் விவேக் வீட்டில் தண்ணீர் தொட்டி முதல் கார் பின் சீட்டு வரை என அனைத்தையும் தூசி தட்டி பார்த்து வருகின்றனர் அதிகாரிகள். முதல்வர் பழனிசாமி சசிகலாவிற்கு எதிராக குரல் கொடுத்த போது தொடர்ந்து முதல்வருக்கு எதிரான கருத்துகளை கூறி வந்ததில் அரசியல் தொடர்பில்லாத விவேக் மற்றும் திவாகரன் பங்கு முக்கியமானதாக இருந்தது.
ஜெயலலிதாவின் புகைப்படங்கள்
மேலும் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது தொடர்பாக சர்ச்சை எழுந்த போதெல்லாம் தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் சொன்ன விஷயம் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எடுத்த புகைப்படங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறினர். ஆனால் அந்த புகைப்படங்களை பொதுவெளியில் வெளியிட முடியாது என்றும் விசாரணை ஆணையம் அமைத்தால் அங்கு சமர்பிக்கப்படும் என்றும் கூறினர்.
அதிகாரிகள் கண்ணில் படுமா
வருமான வரி சோதனையில் எந்த ஆவணங்களையும் மறைக்க முடியாது. அவர்களிடம் அனைத்து ஆவணங்களையும் காட்ட வேண்டும், எனவே இந்த சோதனையின் போது ஜெயலலிதாவின் புகைப்படங்களும் அதிகாரிகள் கண்ணில் பட வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
சோதனைக்கு இதுவும் காரணமா?
எனவே வருமானவரித்துறை சோதனையின் போது அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஒரு வேளை இந்த ஆதாரங்கள் இருப்பதாக இவர்கள் சொல்வது உண்மை தானா என்பதை கண்டறிவதும் இந்த சோதனைக்கான அம்சங்களில் ஒன்றாக இருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.