ஸ்ரீரங்கத்தில் 'லிட்மஸ் டெஸ்ட்'.. பிரசாரக் களத்திற்கு வருவாரா ஜெயலலிதா?
சென்னை: விசித்திரமான ஒரு சூழலில் சிக்கியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா. ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் தனது முதல்வர் பதவியையும், எம்.எல்.ஏ பதவியையும் இழந்தார் ஜெயலலிதா. இந்த நிலையில் அவர் எம்.எல்.ஏவாக இருந்து வந்த ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதும் கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா. பின்னர் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜாமீன் கிடைக்கப் பெற்ற அவர் சென்னை திரும்பினார்.

சென்னை திரும்பியது முதல் அவர் வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. கிட்டத்தட்ட தன்னைத் தானே வீட்டுக் காவலில் வைத்துக் கொண்டது போல வீட்டோடு இருந்து வருகிறார். கட்சி சார்பான விஷயங்கள் குறித்து மட்டும் அவர் அவ்வப்போது அறிக்கை விட்டு வருகிறார். அரசு நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்ள பல்வேறு ஏற்பாடுகளை செய்து வைத்து விட்டார். அந்த ஏற்பாடுகளின்படி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செயல்பட்டு வருகிறார்.
வீட்டை விட்டு வருவதில்லை, முதல்வர் உள்ளிட்டோரை எப்போதாவதுதான் சந்திப்பது, விழாக்களுக்குக் கூட வாழ்த்து சொல்வதில்லை என்று மிகவும் கட்டுப்பாட்டோடு இருந்து வரும் ஜெயலலிதாவுக்கு இந்த இடைத் தேர்தல் மிகப் பெரிய சவாலாகும்.
வீட்டில் இருந்தபடியே இந்த இடைத் தேர்தலை அவர் எதிர்கொள்வாரா என்ற பெரும் கேள்வி எழுந்துள்ளது. அல்லது வீட்டை விட்டு வெளியேறி தீவிரப் பிரசாரம் செய்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதற்கு முன்பு இப்படிப்பட்ட நிலை ஜெயலலிதாவுக்கு வரவில்லை. காரணம், கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிடாமலேயே, தன் மீதான வழக்குகள் நிலுவையில் இருந்தபோதே, நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத் தாக்கல் செய்து அவை அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் முதல்வராக பதவியேற்றார். பின்னர் அதை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இதனால் அவர் ராஜினாமா செய்தார். அப்போது அவர் எந்தத் தொகுதியிலும் உறுப்பினராக இல்லை.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜெயலலிதா பதவி விலகினார். அடுத்து 2002ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அவர் மீண்டும் போட்டியிட தடை நீங்கியது. இதையடுத்து ஓ.பன்னீர் செல்வம் பதவி விலகினார். ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட்டு வென்று மீண்டும் முதல்வராக அமர்ந்தார்.
ஆனால் தற்போதைய நிலையே வேறு. அவர் பதவி விலகும் கட்டாயம் ஏற்பட்டு, அந்தத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் அதிமுக எப்படி செயல்படப் போகிறது. தான் நின்று வென்று பின்னர் விலகிய தொகுதிக்கு வேறு வேட்பாளரை அறிவித்து அவருக்காக வாக்கு கேட்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஜெயலலிதா.
மறுபக்கம் பல்வேறு கட்சிகளும் ஜெயலலிதாவை இந்தத் தேர்தலி்ல் பதம் பார்க்க காத்திருக்கின்றன. திமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் இதில் சற்று வேகமாகவே உள்ளன. காரணம், இதில் தங்களது பலத்தைக் காட்டி விட்டால் அதிமுகவை இந்த இடைத் தேர்தலில் வீழ்த்தி விட்டால் அது மிகப் பெரிய பூஸ்ட்டாக அமையும் என்பது இவர்களின் எண்ணம்.
ஆனால் அதிமுக தோற்குமா என்பது தெரியவில்லை. அதேசமயம், ஜெயலலிதாவுக்கு இது நிச்சயம் சத்திய சோதனை என்பதையும் மறுக்க முடியாது.
ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலைப் பொறுத்தமட்டில் ஜெயலலிதாவுக்கு இரண்டே இரண்டு ஆப்ஷன்கள்தான் உள்ளன..1. அதிமுக வெற்றி பெற்றேயாக வேண்டும். 2. கடந்த தேர்தலில் ஜெயலலிதா வாங்கிய வாக்குகளை விட அதிகமாக பெற்றாக வேண்டும்.
இது இரண்டும் நடந்தால்தான் ஜெயலலிதாவுக்கு இன்னும் செல்வாக்கு போகவில்லை என்பது உறுதியாகும், தெளிவாகும்.
வழக்கம் போல அமைச்சர் படையை இறக்கி காரியம் சாதிக்க நிச்சயம் ஜெயலலிதா முயலுவார். அதில் சந்தேகம் இல்லை. அதேசமயம், அவர் வருவாரா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.












Click it and Unblock the Notifications