முகவரி இல்லாதவர் ஸ்டாலின்... ராஜினாமா வெறும் அரசியல் நாடகம்: அழகிரி தாக்கு
சென்னை : திமுகவினர் திருந்தினால் மீண்டும் அக்கட்சியில் சேர்வேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். மேலும், ஸ்டாலின் முகவரி இல்லாதவர் என்றும், அவர் கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் அரசியல் நாடகம் எனவும் அழகிரி விமர்சித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அழகிரி, கட்சியின் விதிமுறைகளை மீறி நடந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அந்த பின்னணியில் லோக்சபா தேர்தலை மு.க.ஸ்டாலின் உத்தியின் கீழ் திமுக சந்தித்து பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில், மீண்டும் அழகிரியைக் கட்சியில் இணைக்கும் நடவடிக்கைகள் திரைமறைவில் நடந்து வருகின்றன. ஆனாலும் அது இழுபறியாகவே உள்ளது.
இந்நிலையில், இன்று சென்னை வந்தார் அழகிரி. விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் மீண்டும் திமுகவில் சேரும் திட்டம் உள்ளதா எனக் கேள்வி எழுப்பப் பட்டது. அதற்குப் பதிலளித்த அழகிரி, ‘திமுகவில் தகுதி அற்றவர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள் வெளியேற வேண்டும். திமுகவினர் திருந்தட்டும், திருந்தினால் நான் அந்த கட்சியில் சேருகிறேன். ராஜினாமா குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முகவரி இல்லாதவரை நான் விமர்சிக்க தயாராக இல்லை. இது அரசியல் நாடகம்' என்றார்.
திருடர்கள் என யாரைச் சொல்கிறீர்கள் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அழகிரி, ‘நான் திமுகவைத் தான் பொதுவாக திருடன் என்கிறேன் . திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' எனப் பதிலளித்தார்.
அப்படியும் விடாமல் பெயரை சொல்லுங்கள் என செய்தியாளர்கள் கேட்ட போது, ‘நீங்களே யாரையாவது சேர்த்து எழுதுவீர்கள் தானே இது போல் எழுத வேண்டியது தானே' என அழகிரி கிண்டலாக கூறினார்.
அழகிரியின் இந்தப் பேட்டி குறித்து ஸ்டாலினிடம் கருத்து கேட்கப் பட்டது. அதற்கு அவர், ‘கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கெல்லாம் உங்களிடம் நான் பதில் ஏதும் சொல்ல முடியாது' என பதிலளித்தார்.
திமுக தலைவர், பொதுச் செயலாளர் பதவிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பொதுச் செயலாளர் பதவியைக் கேட்டு ஸ்டாலின் ராஜினாமா செய்ததாக இன்று காலை பெரும் பரபரப்புக் கிளம்பியது. இந்தப் பின்னணியில் அழகிரி சென்னை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது