எந்த சூழலிலும் பாஜகவை ஆதரிக்க மாட்டேன் என கருணாநிதி அறிவிப்பாரா?: ப. சிதம்பரம்
சென்னை: தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மத்தியில் அரசு அமைக்க பாஜக முன்வந்தால், அந்த முயற்சிக்கு திமுக ஒருபோதும், எந்த சூழ்நிலையிலும் ஆதரவு அளிக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தால் மட்டுமே திமுகவின் நிலைப்பாடு தெளிவாகும் என்று மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு, மத்தியில் அரசு அமைக்கும் முயற்சியில் பா.ஜனதா கட்சி ஈடுபட்டால், அந்த கட்சிக்கு யார் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள் என்ற கேள்வியை நான் எழுப்பி வருகிறேன். இந்த கேள்வி குறித்து திமுக தன்னுடைய நிலைப்பாட்டை இன்னும் தெளிவாக்கவில்லை என்பதை கவலையுடன் சுட்டிக்காட்டுவது என்னுடைய கடமையாகிறது.

திமுக தலைவர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில், 1999-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் திமுக ஏன் கூட்டணி அமைத்தது என்று விளக்கமளிக்க முயன்றிருக்கிறார். அது ஏற்புடைய விளக்கமாக எனக்கு தோன்றவில்லை என்பதை கனத்த உள்ளத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
1998-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமைந்தது. அந்த கூட்டணியை கடுமையாக திமுகவும், தமிழ் மாநில காங்கிரசும் எதிர்த்தன. பாஜகவின் முகத்திரையை கிழித்து அதனுடைய உண்மையான வலதுசாரி, மதச்சார்பு முகத்தை தமிழ்நாட்டு மக்களின் முன்வைத்த மூத்த தலைவர் கருணாநிதி என்பது நமக்கு பசுமையாக நினைவில் உள்ளது.
அந்த தேர்தலுக்கு பிறகு பாஜக தலைமையில் மத்திய அரசு அமைந்தது உண்மையே. அக்கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்ததும் உண்மையே. அக்கூட்டணியிலிருந்து விலகி அந்த அரசு கவிழ்வதற்கு அதிமுக காரணமாக இருந்ததும் உண்மையே. மத்தியில் பாஜக அரசு கவிழ்ந்தது. திமுகவுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை அல்லவா தந்திருக்க வேண்டும்? பாஜக அரசு ஓராண்டில் கவிழ்ந்துவிட்டதே என்பதற்காக திமுக ஏன் கவலைப்பட்டிருக்க வேண்டும்?
2014-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளுக்குப்பின் திமுகவின் நிலைப்பாடு என்ன என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வி. இஸ்லாமிய சமுதாயத்தினரையும், கிறிஸ்தவ சமுதாயத்தினரையும் நரேந்திரமோடி எவ்வாறெல்லாம் இழிவுபடுத்தி பேசினார் என்பதை திமுக தலைவர் கருணாநிதி நினைவு கூரவேண்டும்.
எனவே, தேர்தல் முடிவுகளுக்குப்பிறகு மத்தியில் அரசு அமைக்க பாஜக முன்வந்தால், அந்த முயற்சிக்கு திமுக ஒருபோதும், எந்த சூழ்நிலையிலும் ஆதரவு அளிக்காது என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்தால் மட்டுமே திமுகவின் நிலைப்பாடு தெளிவாகும்.
இந்த அறிவிப்பைத்தான் மதச்சார்பற்ற முற்போக்கு சிந்தனையுள்ள மத்திய அரசு அமைய வேண்டும் என்று விரும்பும் தமிழ்நாடு மக்கள் குறிப்பாக சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், தலித் சமுதாயத்தினர், பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினர்- திமுக தலைவர் கருணாநிதியிடம் எதிர்பார்க்கிறார்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications