கோபியில் புகுந்து செங்கோட்டையனை கலகலக்க வைப்பாரா குஷ்பு?
சென்னை: அதிமுகவின் கோட்டையாக கருதப்படும் கோபிசெட்டிப்பாளையத்தில் நடிகை குஷ்பு போட்டியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவர் நடிகையாக இருந்த சமயத்தில் அடிக்கடி ஷூட்டிங்குக்காக வந்து போன பகுதி என்பதாலும், கோபியைச் சொந்த ஊராகக் கொண்ட இயக்குநர் சுந்தர். சியின் மனைவி என்பதாலும் இந்த இடத்தில் இவர் போட்டியிட்டால் சரியாக இருக்கும் என தமிழக காங்கிரஸ் தலைமை கருதுகிறதாம்.
அதிமுகவின் கோட்டை கோபி. இந்தத் தொகுதியில் முடிசூடா மன்னராக வலம் வருபவர் செங்கோட்டையன். முன்னாள் அமைச்சரான இவர் 1996 தேர்தல் தவிர மற்ற தேர்தல்களில் மொத்தமாக 6 முறை வெற்றி பெற்று அசத்தியவர்.
தற்போதும் இவர்தான் இத்தொகுதியின் உறுப்பினர். 7வது முறையாக தற்போது இவர் களம் காண்கிறார். இவரை வீழ்த்த காங்கிரஸ் கட்சி வியூகம் வகுத்து வருகிறது.
கோபியில் காங்கிரஸ்
கோபியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இங்கு யார் போட்டியிடுவார்கள் என்பது எதிர்பார்ப்பைத் தூண்டியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலேயே இந்தத் தொகுதியில் மட்டும்தான் காங்கிரஸுக்கு சீட் கொடுத்துள்ளது திமுக.
இளங்கோவனின் கவுரவம்
ஈவிகேஎஸ் இளங்கோவனின் சொந்த மாவட்டம் ஈரோடு. எனவே கிடைத்த இந்த ஒரு தொகுதியையும் வெல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இளங்கோவனுக்கு உள்ளது.
மகனா.. குஷ்புவா
இந்தத் தொகுதியில் தனது மகன் திருமகனை நிறுத்த இளங்கோவன் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நடிகை குஷ்புவின் பெயர் தற்போது அடிபடுகிறது.
ஏன் குஷ்பு?
குஷ்புவின் கணவர் சுந்தருக்கு ஈரோடுதான் பிறந்த மாவட்டமாகும். கொங்கு வேளாளர் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால்தான் சமீப காலமாக நான் ஈரோட்டின் மருமகள் என பேசி வருகிறார் குஷ்பு.
ஷூட்டிங் அனுபவம் நிறைய
மேலும் குஷ்பு பிசியான நடிகையாக இருந்தபோது ஷூட்டிங்குக்காக ஈரோடு பக்கம் அதிகம் வந்துள்ளார். குறிப்பாக கோபி பக்கம் அதிகம் போயுள்ளார். சின்னத்தம்பி உள்ளிட்ட படங்கள் இதற்கு உதாரணம். எனவே அந்த அனுபவத்திற்காகவும் அவரது பெயர் அடிபடுகிறதாம்.
அதிமுக செம உற்சாகம்
மறுபக்கம் அதிமுக தரப்பு பயங்கர உற்சாகமாக உள்ளதாம். திமுக நிற்காமல், காங்கிரஸ் கட்சிக்குசீட்டை தள்ளி விட்டதால் இப்பவே ஜெயிச்சுட்டோம் என்று செங்கோட்டையன் தரப்பும், அவருக்காக வேலை பார்த்து வரும் அதிமுகவினரும் படு உற்சாகமாக உள்ளார்களாம்.