தீபாவளி போனஸ்... ரேசன்கார்டு உள்தாள்.. 'கீ' பிரச்சினைகளில் 'கில்லி' மாதிரி முடிவெடுப்பாரா ஓ.பி.எஸ்?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சிறைக்குப் போனதை அடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் முதல் 30 அமைச்சர்களும் சோக்கீதம் வாசித்து வருகின்றனர்.
இதனால் துறை ரீதியான முடிவெடுக்க முடியாமல் அதிகாரிகள் திணறிவருகின்றனர். ஏராளமான உயரதிகாரிகள் தற்செயல் விடுப்பில் சென்றுவிட்டதால் அரசு முற்றிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ளநிலையில் போனஸ் அறிவிப்பு எப்போது வரும் என்று மின்வாரிய ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.

ஆட்சிக்கு ஆபத்து இல்லை
சொத்து குவிப்பு வழக்கில், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், 4 ஆண்டுகாலம் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா, முதல்வர் பதவி மற்றும் எம்.எல்.ஏ., பதவியை இழந்தார். சட்டசபையில், அ.தி.மு.க.,விற்கு மெஜாரிட்டி இருந்ததால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படவில்லை.
முதல்வரான ஓ.பி.எஸ்
தீர்ப்பு வெளியான மறுநாள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஒன்று கூடி, புதிய முதல்வராக, ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்தனர். அவரும் கவர்னர் அழைப்பின்படி, 29ம் தேதி, முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன், 30 அமைச்சர்களும் அழுதுகொண்டே பதவியேற்றனர்.
ஒன்மேன் ஆர்மி
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி வகித்தபோது, முக்கிய முடிவுகளை, அவரே எடுத்து வந்தார். முக்கிய திட்டங்களை அறிவிப்பது, திட்டங்களை துவக்கி வைப்பது என, ஒன் மேன் ஆர்மியாக அனைத்து பணிகளையும் அவரே கவனித்து வந்தார்.
டம்மியான அமைச்சர்கள்
அமைச்சர்கள் பெயரளவிற்குத்தான் செயல்பட்டு வந்தனர். சட்டசபையில், பட்ஜெட் கூட்டத்தொடரிலும், துறை ரீதியான அறிவிப்புகளை, 110வது விதியின் கீழ், ஜெயலலிதாவே அறிவித்து வந்தார்.
அரசுப்பணிகள் தேக்கம்
இந்நிலையில் ஜெயலலிதா இல்லாததால், முதல்வராக பதவியேற்ற ஓ.பன்னீர்செல்வம், தன்னிச்சையாக செயல்பட தயங்கி வருகிறார். என்ன செய்வது எனத் தெரியாமல் அமைச்சர்கள் தவித்து வருகின்றனர். இதனால், அரசு பணிகள் தேக்கமடைந்துள்ளன.
சோகத்தில் அமைச்சர்கள்
தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் அனைவரும் சோகத்தில் இருப்பதால், அவர்களை சந்திக்க கட்சிதொண்டர்கள், பொதுமக்கள் என, யாரும் வருவது இல்லை.
போனஸ் அறிவிப்பு எப்போ?
மின்வாரிய ஊழியர்கள், டாஸ்மாக் ஊழியர்கள், போக்குவரத்து ஊழியர்கள், தீபாவளி போனஸை எதிர்பார்த்துள்ளனர். இது தொடர்பாகவும், அரசு விரைவாக முடிவெடுக்க வேண்டியுள்ளது.
ரேசன் கார்டு இணைப்பு
தமிழகத்தில் ரேஷன் கார்டுகளில் இணைப்புத்தாள், டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. புதிய கார்டு வழங்கப்படுமா அல்லது மீண்டும் இணைப்புத்தாள் பொருத்தப்படுமா என முடிவெடுக்க வேண்டியுள்ளது.
அமைச்சர்கள் உத்தரவு
ஜெயலலிதா ஜாமினில் வெளியே வரும் வரை, அவசர பைல்களைத் தவிர, வேறு கோப்புகளை அனுப்ப வேண்டாம்' என, துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு சுணக்கம்
இதனால், தலைமை செயலக அதிகாரிகள் எந்த கோப்பை அனுப்புவது, எதை அனுப்பாமல் இருப்பது என, முடிவெடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். இதனால், அரசு பணிகள் தேக்கமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
விடுப்பில் போகும் அதிகாரிகள்
இதனால், உயர் அதிகாரிகளில் பலர், தற்செயல் விடுப்பில் செல்கின்றனர். ஜெயலலிதா சிறையில் இருந்து வெளியில் வந்தால் தான், பணிகள் வழக்கம்போல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications