ஜெ.வுக்கு பரப்பன அக்ரஹாரா.. கருணாநிதி, ஸ்டாலினுக்கு விரைவில் புழல்?.. கைது வதந்தியால் பரபரப்பு!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் திமுக தலைவர் கருணாநிதியையும், பொருளாளர் மு.க.ஸ்டாலினையும் கைது செய்ய தமிழக தீவிரம் காட்டத் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இருவர் மீதும் கொலை மிரட்டல், தாக்குதல் நடத்தத் தூண்டியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் சென்னை ராயப்பேட்டை போலீஸார் ஏற்கனவே வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜெயலலிதா ஜாமீனில் வெளியானதும் இவர்கள் இருவரையும் கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. இதனால் திமுக தரப்பில் இதை முறியடிக்கத் தேவையான சட்டப்பூர்வமான ஏற்பாடுகளைத் தயார் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

சென்னையில் வன்முறை
ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதும் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்தது. கடையடைப்பு, பஸ்கள் எரிப்பு, சாலை மறியல் என அதிமுகவினர் இறங்கினர். சென்னையிலும் வன்முறை தலைவிரித்தாடியது.

கோபாலபுரத்திற்கு விரைந்த அதிமுகவினர்
திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை நோக்கி அதிமுகவினர் படையெடுத்து வந்தனர். இதை எதிர்பார்த்து திமுகவினரும் திரண்டிருந்தனர். இரு தரப்புக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இதில் இரு தரப்பிலும் பலர்காயமடைந்தனர்.

அதிமுகவினர் புகார்.. போலீஸ் வழக்கு
இந்த தாக்குதல் தொடர்பாக காயமடைந்ததாக கூறப்பட்ட அதிமுகவினர் சிலர் ராயப்பேட்டை காவல் நிலயைத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் கலவரத்தைத் தூண்டியது. பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட புகார்களை கருணாநிதி, மு.க.ஸ்டாலின் மற்றும் 500 திமுகவினர் மீது போலீஸார் பதிவு செய்தனர்.

கைது நடவடிக்கை வருமா
இந்த வழக்கில் கருணாநிதி,ஸ்டாலின் கைது செய்யப்படுவார்களா என்று ராயப்பேட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர்கள் விசாரித்தபோது அப்படியெல்லாம் இருக்காது என்றுதான் முதலில் பதில் வந்தது. ஆனால் தற்போது கைதுக்கான நடவடிக்கைகள் ரகசியமாக முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஜெயலலிதா வெளியே வந்ததும்
குறிப்பாக ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்து வெளியே வந்ததும் கருணாநிதி, ஸ்டாலின் கைது செய்யப்படலாம் என்று பேச்சு அடிபடுகிறது. இதனால் திமுக தரப்பு கலக்கமடைந்துள்ளது. இதைத் தடுக்கும் வகையில் சட்டப்பூர்வமான ஆலோசனைகளில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications