அமெரிக்க கப்பல் விவகாரம்: இன்று நீதிபதி தீர்ப்பு

இந்திய கடல் எல்லையில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க ஆயுதக்கப்பல் விவகாரத்தில் கப்பல் மாலுமிகள் உள்ளிட்ட 33பேர் கடந்த 18ம் தேதி அன்று கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கப்பலின் பராமரிப்பு பணிக்காக கப்பலின் கேப்டன் டட்னிக் வேலன்டைன் மற்றும் தலைமை பொறியாளர் சிகோரென்டொ வெலரி ஆகியோர் கப்பலில் இருந்தனர். இவர்களில் கப்பல்கேப்டன் தற்கொலைக்கு முயன்றதை அடுத்து இருவரையும் க்யூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்திய கடல் எல்லையில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பாதுகாவலர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களை தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசிய நிலையில், பிடிபட்டவர்களில் 22பேர் சென்னை புழல் சிறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் அமெரிக்க கப்பலை சேர்ந்த பால்டேவிட் டெர்மிடவர்(இங்கிலாந்து), மற்றும் இந்தியாவை சேர்ந்த லலித்குமார் குராங், ராஜேஷ்வர் திவேதி ஆகியோரை க்யூ பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுமீதான விசாரனை இரண்டுநாட்கள் தூத்துக்குடி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1ல் நடந்தது. நீதிமன்ற விசாரணைக்காக சம்மந்தப்பட்ட மூவரும் நீதிபதி கதிரவன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். கப்பலின் பணியாளர்களை கியூ பிரிவு காவல்துறையினர் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்ககூடாது என்று கப்பல்பணியாளர்கள் சார்பில் மும்பையை சேர்ந்த வழக்கறிஞர்கள் வாதம் செய்தனர்.
கப்பல் பணியாளர்கள் தரப்பில் வாதம் செய்த வழக்கறிஞர்கள், கப்பல் பிடிபட்டது தொடர்பாக தூத்துக்குடி மரைன் போலீசார் பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைக்கும், கியூ பிரிவு போலீசாரின் தகவல் அறிக்கைக்கும் வேறுபாடுகள் உள்ளது. இதில் கடல்மைல் தொலைவானது 19நாட்டிகல்மைலுக்கும் குறைவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று எடுத்துரைத்தனர்.
இருதரப்பினரின் வாதத்தையும் கேட்ட நீதிபதி கதிவரன் இதுதொடர்பாக இன்று (24ம் தேதி) தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.
இதனையடுத்து கப்பல் பணியாளர்கள் 3பேரும் மீண்டும் பாளை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கப்பல் பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.












Click it and Unblock the Notifications