எப்போதும் போலீசுக்கு சப்போர்ட் பண்ணும் ரஜினி. எச்.ராஜா பேச்சை கண்டிப்பாரா?
போலீஸ் குறித்து மிகவும் மோசமாக பேசிய எச்.ராஜாவிற்கு எதிராக எப்போதும் போலீசுக்கு ஆதரவாக பேசும் ரஜினிகாந்த் ஏதாவது கருத்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சென்னை: போலீஸ் குறித்து மிகவும் மோசமாக பேசிய எச்.ராஜாவிற்கு எதிராக எப்போதும் போலீசுக்கு ஆதரவாக பேசும் ரஜினிகாந்த் ஏதாவது கருத்து தெரிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பொதுவாக டிவிட்டர் மூலம் வைரல் ஆகும் எச். ராஜா தற்போது வீடியோ மூலம் வைரலாகி உள்ளார். வடஇந்திய ஊடகங்கள் கூட எச்.ராஜாவை வைத்து விவாதம் நடத்தி வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார். மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது.
|
முதல் முறை ஆதரவு
சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்காத நடிகர் ரஜினிகாந்த், வேறு ஒரு முக்கியமான கருத்தை தெரிவித்து இருந்தார். அதில் போலீசார் தாக்கப்பட்ட செய்தி குறித்து ''வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான்.இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து.சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.'' என்று குறிப்பிட்டு இருந்தார்.
இரண்டாவது தடவை
இரண்டாவது முறை தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்து பேசிய ரஜினிகாந்த, தனது பேட்டியில் ''தூத்துக்குடியில் போலீசார் மீது கை வைத்தவர்களை சும்மா விடக்கூடாது. அங்கு நடந்த போராட்டத்துக்கு சமூக விரோதிகள் ஊடுருவலே காரணம். போலீசை தாக்கியவர்கள் மன்னிக்கப்பட கூடாது. இப்படி தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாக மாறி விடும்" என்று போலீசுக்கு ஆதரவாக பேசினார்.
என்ன பார்வை
இப்படி போலீசுக்கு ஆதரவாக எப்போதும் கருத்து தெரிவித்து வரும் ரஜினிகாந்த், எச்.ராஜா விஷயத்திலும் அப்படி கருத்து தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. எச்.ராஜா போலீஸ் மட்டுமில்லாமல் நீதிமன்றத்தையும் அவமானப்படுத்தி இருக்கிறார். எச்.ராஜாவின் இந்த மோசமான செயல் குறித்து ரஜினியின் பார்வை என்ன என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. (தானும் அரசியலுக்கு வருவதாக அவர் கூறியுள்ளதால் இந்த கேள்வி அவர் முன்பு தொக்கி நிற்கிறது)
கேள்வி எழுப்புவாரா?
எச்.ராஜா போலீசை தாக்கவில்லை என்றாலும், இதை விட தமிழகத்தில் யாரும் தமிழக காவல்துறையை பகிரங்கமாக அசிங்கப்படுத்தியதில்லை என்று கூறும் அளவுக்கு போலீசை எச்.ராஜா இழிவுபடுத்தியுள்ளார். போலீஸ் தாக்கப்பட்டதை விட மோசமான விஷயம் இது. கிட்டத்தட்ட ஒட்டுமொத்த காவல்துறையையும் அசிங்கப்படுத்தி விட்டார் எச். ராஜா. இதற்கு "டிஎஸ்பி அலெக்ஸ் பாண்டியன்" ரஜினிகாந்த் ஏதாவது கருத்து தெரிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறைந்த பட்சம் ஒரு டிவிட்டாவது போடுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.