அதிமுக இணைப்பு விவகாரம்.. எஸ்.எம்.எஸ். வந்தது.. விரைவில் நல்ல முடிவை சொல்லுவோம் - ஓ.பி.எஸ்
சென்னை: இரு அணிகள் பேச்சுவார்த்தை குறித்து அதிமுக அம்மா அணியிடம் இருந்து எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. அதுகுறித்து விரைவில் நல்ல முடிவை சொல்லுவோம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளையும் இணைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தொடர்ந்து ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இரு அணிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்காக ஓபிஎஸ் அணி சார்பிலும் எடப்பாடி பழனிசாமி அணி சார்பிலும் தனித்தனியாக இரு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்று இரு அணிகளுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில், இரு அணியைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் இரு அணிகளும் பேச்சுவார்த்தை நடத்துவதில் தொடர்ந்து சிக்கல் உருவாகியுள்ளது.
இதனிடையே நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிமுக தலைமை அலுவலகத்தில் பேசிய எம்.பி வைத்திலிங்கம் கூறினார். ஓபிஎஸ் அணியினர் எப்போது வேண்டுமானாலும் பேச வரலாம் என்றும் பேச்சு வார்த்தை தொடர்பாக எஸ்.எம்.எஸ் அனுப்பி உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் மதுசூதனன் இல்லத்திற்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், பேச்சுவார்த்தை குறித்து அதிமுக அம்மா அணியிடம் இருந்து வந்த எஸ்.எம்.எஸ்.க்கு நல்ல முடிவை விரைவில் சொல்லுவோம் எனக் கூறினார். இரட்டை இலை சின்னம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பன்னீர்செல்வம், இரட்டை இலை சின்னம் வழக்கில் உள்ளதால் அதைப் பற்றி பேச முடியாது என்றார்.