டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்களின் பயோ-டேட்டாவை தாக்கல் செய்ய வேண்டும்- ஹைகோர்ட் உத்தரவு
சென்னை: டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் பையோ -டேட்டாவை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) கடந்த ஜனவரி 31-ந் தேதி அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் புதிய உறுப்பினர்களாக நியமித்து தலைமைச் செயலாளர் உத்தரவிட்டார். இந்த நியமனத்தில் வெளிப்படத் தன்மை இல்லை.
உச்ச நீதிமன்ற உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனகூறி திமுக சார்பில் டிகேஎஸ்.இளங்கோவன், பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் உறுப்பினர்கள் நியமனம் அனைத்தும் சட்ட விதிகளின்படி தான் நடைபெற்றுள்ளது. இதில் விதிமுறைகள் மீறப்படவில்லை. மனுதாரர் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் தமிழக அரசின் சார்பில் ஆஜாரன அட்வகேட் ஜெனரல், உறுப்பினர்கள் நியமனத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகள் முழுமையாக பின்பற்றப்பட்டுள்ளது. தகுதியான நபர்கள் மட்டுமே உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தேவையெனில், உறுப்பினர்களின் பையோ-டேட்டாவை தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள், டிஎன்பிஎஸ்சி-க்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேரின் பயோ-டேட்டாவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.
மேலும் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஆகஸ்ட் 4-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications