கேரளாவில் கோக் நிறுவனத்தை விரட்டியது போல் நெடுவாசல் தீர்மானமும் ஹைட்ரோ கார்பனை துரத்தியடிக்குமா?
திருச்சி: நெடுவாசலில் கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தம் கடந்த திங்கள்கிழமை கையெழுத்தானது. இதில் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த ஜெம் என்ற கர்நாடகாவை சேர்ந்த நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதியை மாநில அரசு கொடுத்துவிட்டால் ஜரூராக வேலை தொடங்கிவிடும் நிலையில்தான் ஹைட்ரோகார்பன் திட்டம் உள்ளது.

தீர்மானங்கள்
இதனால் அதிர்ச்சியடைந்த தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நெடுவாசலில் கிராம சபை கூட்டத்தில் இன்று ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அதிகாரிகள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஓஎன்ஜிசி கிணறுகள் அகற்றம்
தமிழக விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ஊராட்சி பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நெடுவாசல் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறுகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆழ்துளை கிணறுகளை அகற்றி விளைநிலங்களாக மறுசீரமைத்தது 3 மாதங்களில் ஒப்படைக்க வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அதிகாரம் உள்ளவை
கிராம சபையே இப்படி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதால் இதற்கு வலு கிடைத்துள்ளது. இது ஒரு ஆக்கப்பூர்வ நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின்படி கிராம சபைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை. ஊராட்சி மன்ற தலைவரை விட அதிக அதிகாரம் மிகுந்தவை.
அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் கோழிப் பண்ணைக்கு எதிரான போராட்டங்களில் கிராமசபையை பயன்படுத்தியே நீதிமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளனர் மனுதாரர்கள்.

கேரளாவில் சம்பவம்
கேரளாவில் ப்ளாச்சிமாடா பஞ்சாயத்து கிராம சபையின் அதிகாரத்தை பயன்படுத்தியே கேரள உயர்நீதிமன்ற உத்தரவு மூலம் கோகோ கோலா ஆலையை முடியது (பிறகு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது). சட்டமன்றம், நாடாளுமன்றம் போலவே உள்ளூர் விவகாரங்களில் கிராமசபைக்கு அதிகாரம் உள்ளது. உள்ளூர் மக்கள் பிரச்சினையை புரிந்துகொண்டு அவர்களால்தான் திறமையாக தீர்வு காண முடியும் என்பதற்காகத்தான் பஞ்சாயத்து ராஜ் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால் அந்த அதிகார எல்லை என்பது நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications