காங்கிரஸிலிருந்து விலகுகிறாரா திருநாவுக்சரசர்?
புதுக்கோட்டை: முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான எஸ்.திருநாவுக்கரசர் கட்சியை விட்டு விலகப் போவதாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் காங்கிரஸ் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார்.

திருமணத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் பேசினார். அப்போது அவர் கூறுகையில், 'சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் தான் கட்சி தலைமையின் மூலம் அறிவிக்கப்படும்.
மற்ற கட்சிகளைப்போல தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திக்கும் கட்சி காங்கிரஸ் இல்லை. என்றும் மக்களோடு மக்களாகவே காங்கிரஸ் கட்சி இருக்கும்.
நான் காங்கிரஸை விட்டு விலகும் எண்ணமோ, அதிமுகவில் மீண்டும் இணையும் எண்ணமோ இல்லை. எப்போதும் நான் காங்கிரஸ் கட்சியிலேயே நீடிப்பேன்' என்றார் அவர்.
திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சராக பல வருடம் நீடித்தவர். அவரது மறைவுக்குப் பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு மீண்டும் வந்தார். பிறகு மீண்டும் பிரிந்தார். அதன் பின்னர் காங்கிரஸில் அவர் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications