இடைத் தேர்தல்... விஜயகாந்தின் மவுனம் கலையுமா?
திருச்சி: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளதாக கூறப்படும் தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தனது ஆதரவினை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவரது மவுனத்தினால் தேமுதிக தொண்டர்கள் ஸ்ரீரங்கத்தில் தேர்தல் பணிகளை செய்யாமல் சுணக்கம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், பா.ம.க., தா.ம.கா. ஆகிய கட்சிகள் போட்டியிடவில்லை என்றும் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும் அறிவித்துள்ளன.
தி.மு.க., அ.தி.மு.க., பாஜக, கம்யூனிஸ்டு ஆகிய 4 கட்சிகள் மட்டும் போட்டியிடுவதால் நான்கு முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை 50 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்து அனைத்து அமைச்சர்களும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் தங்கியிருந்து தீவிர பிரசாரம் மற்றும் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தி.மு.க.வும் 83 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நியமனம் செய்துள்ளது. இந்த குழுவில் உள்ள முன்னாள் அமைச்சர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதைப்போல பாஜக மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளும் தொகுதி முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி
பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக பாஜகவைச் சேர்ந்த ஆக்ஸ்போர்டு சுப்பிரமணியத்தை வேட்பாளராக அறிவித்தார். அவரும் சூட்டோடு சூட்டாக வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பிரசாரத்தை தொடங்கிவிட்டார்.

தேமுதிக மாவட்ட செயலாளர்
இதை தொடர்ந்து திருச்சி மாநகர தே.மு.தி.க. செயலாளர் விஜயராஜன் அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். மேலும் தே.மு.தி.க. வேட்பாளர் இந்த தொகுதியில் போட்டியிடுவதாக கருதி அவரது வெற்றிக்கு பாடுபடுவோம் என்றும் கூறினார்.

பிரசாரத்தில் விஜயகாந்த்
சமீபத்தில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ஸ்ரீரங்க இடைத் தேர்தலில் பா.ஜ.க வுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், தேர்தல் பிரசாத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்தும், அவருடைய மனைவி பிரேமலதாவும் பங்கேற்பார்கள் என்றும் அறிவித்தார்.

மவுனம் கலைவாரா?
ஆனால் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இடைத்தேர்தலில் தே.மு.தி.க.வின் ஆதரவு யாருக்கு என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. பிரசாரத்திற்கு செல்வது பற்றியும் எதுவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்.

குழப்பத்தில் தேமுதிகவினர்
விஜயகாந்தின் மவுனம் தே.மு.தி.க. தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் தலைவர் அறிவிக்காமல் கூட்டணி கட்சியான பாஜக வேட்பாளருக்கு பிரசாரம் செய்தால் ஏதாவது பிரச்சனை ஆகிவிடுமோ? என்று நினைத்து தே.மு.தி.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இரண்டாவது இடம் கிடைக்குமா?
பாஜகவினர் மட்டுமே இடைத்தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. தேமுதிகவினரும் இணைந்து முழு மூச்சாக களம் இறங்கினால் மட்டுமே ஸ்ரீரங்கம் தொகுதியில் பாஜக குறிப்பிடத்தகுந்த வாக்குகளை பெறமுடியும் என்பது நிச்சயம்.












Click it and Unblock the Notifications