மோடி, வைகோ, விஜயகாந்த், ராமதாஸ்.. வாய்ப்பிருக்கா??
சென்னை: சென்னை மக்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இந்த 'வானவில்' தலைவர்களை ஒரே மேடையில் கை தூக்கியபடி நிற்கும் கோலத்தைக் காணும் நிலை ஏற்படலாம்.
அதாவது நரேந்திர மோடி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகிய கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றிப் பார்க்க தமிழக பாஜக திட்டமிட்டு வருகிறதாம்.
ஆனால் தொகுதிப் பங்கீடு மற்றும் பேரம் உள்ளிட்டவை இன்னும் தெளிவாக முடிவாகாமல் உள்ள நிலையில் இது எப்போது நடைபெறும் என்றுதான் தெரியவில்லை.

திமுக- அதிமுகவுக்குப் போட்டியாக
தமிழகத்தில் பாஜக திடீரென ஒரு புதுவேகத்துடன் களம் புகுந்துள்ளது. காரணம், மோடி. அவருக்கு நாடு முழுவதும் அலை வீசுவதாக பாஜகவினர் சொல்லி வரும் நிலையில் அந்தத் தைரியத்தில் தமிழகத்திலும் அலை பரப்ப பாஜகவினர் அலை மோதிக் கொண்டிருக்கின்றனர்.

குண்டக்க மண்டக்க
இதற்காக கிடைக்கிற கட்சிகளையெல்லாம் கூட்டணிக்குள் இழுத்து விட்டு வருகின்றனர். அவர்களது நேரம் தேமுதிக, பாமகவெல்லாம் இவர்களுடன் கூட்டணி சேரும் நிலை ஏற்பட்டது. ஆனால் எதிர்பாராத விஷயம் முதல் ஆளாக மதிமுக வந்து சேர்ந்தது. இதனால் பாஜகவினருக்கு பெரும் தைரியம், தெம்பு, உற்சாகம் வந்து விட்டது.

நாமதான் அடுத்து
நமது கூட்டணிதான் வலுவானதாக அமையும் என்ற வேகத்துடன் அவர்கள் கூட்டணியை உறுதிப்படுத்தி, வலுப்படுத்தி வருகின்றனர். இதற்காக தேமுதிக, பாமக போன்றவை என்ன விலை கொடுத்தாலும் கொடுத்து வாங்கி விடுவது என்ற ரேஞ்சுக்கு அவர்கள் போய் விட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

பேரத்தில் பிடிவாதமாக உள்ள கேப்டன் கட்சி
ஆனால் பேரத்தில் படு பிடிவாதமாக இருப்பது இந்த விஜயகாந்த்தின் தேமுதிகதான் என்று பச்சையாகவே பேசிக் கொள்கிறார்கள். பெரும் தொகை கேட்கிறார், நிறைய தொகுதிகளைக் கேட்கிறார் என்றும் பேசிக் கொள்கிறார்கள்.

இங்கே ஒரு பேச்சு.. அங்கிட்டும் ஒரு பேச்சு
பாஜகவுடன் சீரியஸாகப் பேசியபடியே காங்கிரஸ் மற்றும் திமுகவுடனும் சைட் பை சைடாக பேசி வந்த தேமுதிக, இந்த விவகாரத்தையே மெகா சீரியல் ரேஞ்சுக்குக் கொண்டு போய் விட்டது.

தேமுதிக, பாமகவைத் தவிர
தற்போதைய நிலவரப்படி தேமுதிக, பாமகவைத் தவிர மற்ற கட்சிகளுடன் சுமூகமான தொகுதிப் பங்கீட்டை பாஜகமுடித்து விட்டதாக தெரிகிறது.

சிங்கப்பூரிலிருந்து விஜயகாந்த் வந்ததும்
விஜயகாந்த் தற்போது சிங்கப்பூர் போயுள்ளார். அவர் திரும்பி வந்ததும் இறுதிக் கட்ட பேச்சு நடக்கவுள்ளதாம்.அதேபோல பாமகவுடனும் பேசவுள்ளனர். எல்லாவற்றையும் மார்ச் 1ம் தேதிக்குள் முடிக்க அதாவது நாளைக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாம் பாஜக.

நாளையே கூட்டணி அறிவிப்பு
எல்லாம் கூடி வந்தால் நாளையே கூட்டணி குறித்த அறிவிப்பை பாஜக வெளியிடலாம் என்று தெரிகிறது.

மார்ச் இறுதியில்
மார்ச் இறுதியில் மோடி தமிழகத்திற்கு வரவுள்ளார். சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் அவர் பேசவுள்ளதாக தெரிகிறது. அப்போது அதே மேடையில் வைகோ, ராமதாஸ், விஜயகாந்த், பச்சமுத்து உள்ளிட்ட கூட்டணித் தலைவர்களை மேடையேற்றி, கரகோஷத்துக்கு மத்தியில் தனது பலத்தைக் காட்ட பாஜக திட்டமிட்டு வருவதாகவும் தெரிகிறது.

பாரா.. பாரா.. பாரா...??
ஜெயலலிதாவுடனேயே சேர்ந்து மேடையேறாதவர் விஜயகாந்த். மோடியுடன் கை கோர்க்க முன்வருவாரா.. ராமதாஸுடன் கை கோர்ப்பாரா.. வைகோவுடன் கை கோர்ப்பாரா.. நிறைய கேள்விகள் உள்ளது.. மேடைக்கு அவர்கள் வந்தால்தான் அதற்குரிய பதில் கிடைக்கும். பொறுத்திருப்போம்...












Click it and Unblock the Notifications