ஆர்.கே. நகரில் போட்டியா? இல்லையா? தீவிர ஆலோசனையில் விஷால்!
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து வரும் விஷால் திங்கட்கிழமையன்று தனது முடிவை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
சென்னை: ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து நடிகர் விஷால் தனது நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திங்கட்கிழமையன்று தனது முடிவு அவர் அறிவிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தென் இந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துகொண்டுள்ளன.
ஆர்.கே. நகரில் விஷால் களமிறங்கினால் 5 முனை போட்டியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியலில் விஷால்
நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட போதே கடும் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற்றார். தயாரிப்பாளர் சங்கத்தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்று தலைவராகியுள்ளார். இப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார் விஷால்.
விஷால் போட்டியா?
இந்த நிலையில்தான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷாலை களமிறக்கி நடிகர் கமல் ஆழம் பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கமலுக்கு வட சென்னையில் கிடைத்துள்ள மக்கள் ஆதரவை விஷாலை வைத்து அறிந்துகொள்ள அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.
கமலுக்கு வாய்ப்பு
விஷால் வெற்றி பெறுகிறாரோ இல்லையோ, கணிசமான வாக்குகளை பெற்றாலும், அது கமல் கட்சி துவங்கும் வேகத்தை அதிகரிக்க வாய்ப்பாக அமையும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
வேட்புமனு தாக்கல் இறுதிநாள்
இதனிடையே நடிகர் விஷால் தனது நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுபவர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய திங்கட்கிழமை கடைசி நாளாகும். எனவே விஷால் தனது முடிவினை திங்கட்கிழமை அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
ஆர்.கே.நகரில் போட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ், சுயேச்சையாக டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் என நான்குமுனை போட்டி நிலவுகிறது. விஷால் களமிறங்கினால் 5 முனை போட்டியாக மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.