தமிழகத்தில் மூன்றரை ஆண்டுகளில் 5வது தலைமைச் செயலாளர்: அதிருப்தியில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்
சென்னை: அதிமுக தலைமையிலான அரசு இதுவரை 5 தலைமைச் செயலாளர்களை நியமித்துள்ளதுடன், சீனியர்களை தவிர்த்து வருவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தமிழக தலைமை செயலாளராக பதவி வகித்த மோகன் வர்கீஸ் சுங்கத், திடீரென டம்மியான ஒரு பதவியில் உட்காரச் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டதில் இருந்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகள் மத்தியில் புகைச்சல் கிளம்பியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

உயர் பதவி
தலைமைச் செயலாளர் பதவி என்பது அதிகாரிகள் மட்டத்தின் டாப் பதவியாகும். அந்த பதவியில் இருப்பவர்களை ஓய்வு பெறும்வரை அப்படியே விட்டுவிடுவதுதான் வழக்கம். ஏனெனில் தலைமைச் செயலாளர்களாக பதவி வகித்தவர்களை வேறு துறைக்கு மாற்றிவிட்டு மற்றொருவரை தலைமைச் செயலாளராக நியமித்தால், அது கவுரவ குறைச்சலாக பார்க்கப்படுகிறது. எனவேதான், தலைமைச் செயலாளர்களை அவ்வளவு சீக்கிரம் எந்த அரசும் மாற்றமாட்டார்கள்.

5வது சுங்கத்
தமிழகத்தில் தலைமை செயலாளராக பதவி வகித்த சங்கர், சுகனேஸ்வர், நாராயணன், மாலதி ஆகியோர்தான் பதவி காலத்திலேயே பணியிடமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த வரிசையில் 5வது அதிகாரியாக மோகன் வர்கீஸ் சுங்கத் பதவி காலம் முடிவதற்குள் மாற்றப்பட்டுள்ளார்.

ஷீலாவுடன் மோதலா?
மோகன் வர்கீஸ் சுங்கத் மீது அரசுக்கு கோபம் ஏற்பட, அரசு உருவாக்கியுள்ள ஆலோசகர் பதவியை அலங்கரிக்கும் ஷீலா பாலகிருஷ்ணனுக்கும் சுங்கத்துக்கும் மோதல் இருந்ததுதான் காரணம் என தெரிகிறது. பதவிக்கு உரிய கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் சுங்கத் சில முக்கிய விஷயங்களில் யாருடைய தலையீடுகளுக்கும் இடம் கொடுக்காமல், தனது சொந்த விருப்பத்தின்படியே செய்து வந்துள்ளார். இது ஆட்சியாளர்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால்தான் இவர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தலைமை செயலக வட்டாரத்தில் கூறப்பட்டுள்ளது.

13வதில் இருந்து நம்பர்-1
இது ஒருபக்கம் என்றால், புதிய தலைமைச் செயலாளர் நியமனத்திலும், அதிகாரிகள் மட்டத்தில் அதிருப்தி நிலவுகிறது. இதற்கு காரணம், ஞானதேசிகன் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் 13வது இடத்தில் இருப்பவராகும். தமிழக நிர்வாகத்தின் உச்சபட்ச பதவி இதுதான் என்பதால், தலைமை செயலாளர் பதவியில் சீனியர் அதிகாரிகளைத்தான் நியமிப்பார்கள். ஆனால், ஞானதேசிகனுக்கு முன்னால் ஐஏஎஸ் அதிகாரிகள் ஸ்ரீதர்(வருவாய்துறை ஆணையர்), மோகன் வர்கீஸ் சுங்கத்(முன்னாள் தலைமைச் செயலாளர்), கிரிஜா வைத்தியநாதன்(நில நிர்வாகம்), கண்ணன் (சுற்றுலாத்துறை செயலாளர்), கணேசன்(சிட்கோ எம்டி) ஆகிய 5 சீனியர் அதிகாரிகள் தமிழகத்தில் பணியாற்றி வருகின்றனர்.

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிருப்தி
மேலும், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் 7 பேர் மத்திய அரசுப் பணியில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக 13வது இடத்தில்தான் ஞானதேசிகன் உள்ளார். 13வது இடத்தில் உள்ளவரை முதல் ஸ்தானத்திலுள்ள பதவியான தலைமைச் செயலாளர் பதவியில் நியமித்துள்ளது சீனியர் அதிகாரிகளிடத்தில் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மூன்றரை ஆண்டுகளில் 5 தலைமை செயலாளர்
2011ம் ஆண்டு மே மாதம் அதிமுக அரசு பதவியேற்றது. அப்போது, தமிழகத்தில் தலைமை செயலாளராக மாலதி இருந்தார். ஆட்சிக்கு வந்த சில நாட்களில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமை செயலாளராக தேபேந்திரநாத் சாரங்கி நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் ஓய்வு பெற்றதையடுத்து, மூன்றாவதாக ஷீலா பாலகிருஷ்ணன் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார். இதையடுத்து மோகன் வர்கீஸ் சுங்கத் நியமிக்கப்பட்டார். ஆனால் அவரது பதவி காலம் முடியும் முன்பே, மாற்றப்பட்டு 5வது தலைமை செயலாளராக ஞானதேசிகன் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications