3 நாள்களுக்குள் சென்னை சில்க்ஸ் கட்டடம் தரைமட்டமாக்கப்படும்... அமைச்சர் ஜெயகுமார்
சென்னை சில்க்ஸ் கட்டடம் 3 நாள்களுக்குள் முழுவதுமாக இடித்து தள்ளப்படும் என்று தமிழக நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை: தீக்கிரையான சென்னை சில்க்ஸ் கட்டடம் 3 நாள்களுக்குள் தரைமட்டமாக்கப்படும் என்றும் அதற்கான பணிகள் இன்னும் ஓரிரு மணி நேரங்களில் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.
சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டடத்துக்குள் இருந்த 11 ஊழியர்களை பத்திரமாக மீட்டனர்.
கடுமையாக போராடியும் தீயை அணைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே கட்டடத்தின் 4 மாடிகள் சீட்டுக் கட்டு போல் சரிந்தன. இதைத் தொடர்ந்து கட்டடத்தின் முகப்பு பகுதியும் இடிந்து விழுந்து விட்டது.
400-க்கும் மேற்பட்ட வீரர்கள்
2-ஆவது நாளாக எரிந்து வரும் தீயை அணைக்க 60 தீயணைப்பு வாகனங்களுடன் 400-க்கும் மேற்பட்ட வீரர்கள் இரவு பகலாக முயற்சித்து வருகின்றனர். தீ முழுவதும் பரவியதால் கட்டடம் தானாக விழும் அபாயம் உள்ளது. இதைத் தடுக்க தீ முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பின்னர் கட்டடம் தரைமட்டமாக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
ஐஐடி நிபுணர்கள் ஆய்வு
இந்நிலையில் அக்கம்பக்கத்தில் உள்ள கட்டடங்களுக்கு எந்த சேதாரமும் இல்லாமல் கட்டடத்தை தகர்க்கும் பணிகள் குறித்து ஐஐடி நிபுணர்கள், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், கட்டுமான நிபுணர்கள் ஆகியோரை கொண்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து கட்டடத்தை பார்வையிட்ட அமைச்சர் ஜெயகுமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
தீ முழுவதும் அணைப்பு
அப்போது அவர் கூறுகையில், சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீயும், கரும்புகையும் முழுவதுமாக கட்டுக்குள் உள்ளது. 200 லோடு லாரி மூலம் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது. ஐஐடி, அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் ஆய்வு செய்தபோது கட்டடத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாக உள்ளது. ஸ்திரத்தன்மையற்று உள்ளது என்று தெரிவித்தனர்.
கட்டடம் தகர்ப்பு
இதனால் கட்டடத்தை 3 தினங்களுக்குள் தரைமட்டமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். வெடி வைத்து தகர்த்தால் மற்ற கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்படும். இதனால் ராட்சத இயந்திரம் இன்னும் ஒரு மணி நேரத்தில் வந்துவிடும். அது வந்தவுடன் தகர்க்கும் பணிகள் தொடங்கப்படும். முழுக்க முழுக்க மனிதர்களைக் கொண்டும், இயந்திரத்தைக் கொண்டும் கட்டடம் முழுவதும் தகர்க்கப்படும்.
கெட்டதிலும் நல்லது
இந்த கட்டடம் தகர்க்கப்படுவது அரசு செலவில் செய்யப்படும். மற்ற செலவுகள் கணக்கிடப்பட்டு உரிமையாளரிடம் இருந்து பெறப்படும். அதிகாலை நேரம் என்பதால் பெரும் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதுதான் துரதிருஷ்டத்திலும் ஒரு அதிர்ஷ்டம் என்பதாகும்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை
கட்டடம் விதிகளை மீறி கட்டப்பட்டது ஊர்ஜிதமானால் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டடம் மட்டும் அல்ல மற்ற கட்டடங்களும் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கட்டடங்கள் விதிகளை மீறியது என்று தெரிந்தும் அனுமதி கொடுத்த அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.