ஜூலையில் தமிழக உள்ளாட்சித் தேர்தல்... ஒரு வழியாக முடிவு எடுத்தது தேர்தல் ஆணையம்
ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் சென்னை ஹைகோர்ட்டில் உறுதி அளித்தது.
சென்னை: வரும் ஜூலை மாதம் இறுதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தது.
தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. இந்நிலையில் கடந்த நவம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு இடஒதுக்கீடு, குற்றப் பின்னணியில் உள்ளவர்கள் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட கோரி திமுக வழக்கு தொடுத்தது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை மே 14-ஆம் தேதி நடத்தி முடிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் வருவாய் துறை அலுவலர்களும், சங்கத்தினரும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் அவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்த முடியாத நிலை இருபபதாலும், பயிற்சி அளிக்க வேண்டிய இருப்பதாலும் உள்ளாட்சி தேர்தலை மே மாதத்துக்குள் நடத்தி முடிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் வாதிட்டது.
எனினும் அதை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் இன்னும் தொடங்கவில்லை என்றும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்படுவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது தமிழக தேர்தல் ஆணைய செயலாளர் ராஜசேகர், வரும் ஜூலை மாத இறுதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிப்பதாக உறுதி அளித்தார்.












Click it and Unblock the Notifications