எனக்கும் ஷமீல் அகமதுவுக்கும் தொடர்பில்லை... ஆம்பூர் கலவர காரணகர்த்தா பவித்ரா வாக்குமூலம்
ஆம்பூர்: ஆம்பூரில் பெரம் கலவரம் ஏற்படக் காரணமாக அமைந்தவரான இளம் பெண் பவித்ராவை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனக்கும் போலீஸ் தாக்குதல் காரணமாக பலியான ஷமீல் அகமதுவுக்கும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார் பவித்ரா. தற்போது அவரை அரசு மகளிர் காப்பகத்தில் கொண்டு போய் அடைத்துள்ளனர் போலீஸார்.
பள்ளிகொண்டா குச்சிபாளையத்தை சேர்ந்த பழனி என்பவரது மனைவி பவித்ரா. இவர் கடந்த மே மாதம் 24ம் தேதி காணாமல் போய் விட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், ஆம்பூரைச் சேர்ந்த ஷமில் அகமது விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணையின் போது ஷமிலுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால், ஆம்பூரில் கடந்த 27ம் தேதி இரவு கலவரம் வெடித்தது. பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப் பட்டன. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த கலவரத்தில் பல கோடி ரூபாய் பொதுச்சொத்துக்கள் நாசம் ஆனது. இதையடுத்து சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தடியடி நடத்தி போலீசார் கலவரத்தை கட்டுப்படுத்தினர்.
இதற்கிடையே, மாயமான பவித்ராவை மீட்டுத் தரக்கோரி அவரது கணவர் பழனி சென்னை ஹைகோர்ட்டில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். எனவே, பவித்ராவை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. பவித்ரா பெங்களூரில் இருப்பதாகவும், சென்னையில் இருப்பதாகவும் வெவ்வேறு தகவல்கள் உலா வந்தன.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு பகுதியில் பவித்ரா இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்றிரவு தனிப்படை போலீசார் சென்னை விரைந்து வந்து, கோயம்பேடு பஸ் நிலையம் அருகே பவித்ராவை மீட்டனர். பின்னர், அவரை ராணிப்பேட்டை அருகே உள்ள மேல்பாடி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற போலீசார், அங்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, தலைமறைவாக இருந்த போது பவித்ரா சரவணன் மற்றும் சுரேந்திரன் என்ற இரண்டு இளைஞர்களுடன் செல்போனில் பேசியது தெரியவந்தது. நேற்றிரவே அந்த இரண்டு இளைஞர்களையும் சென்னையில் போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் கால்செண்டரில் பணி புரியும் அவர்களிடம் பவித்ரா வேலைக்கான நேர்காணலுக்காக வந்ததாக தெரிவித்துள்ளனர். மேலும், பவித்ரா காணாமல் போனதற்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என அவர்கள் கூறியுள்ளனர். ஆனபோதும், தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையடுத்து நீதிபதி முன்பு போலீஸார் பவித்ராவை ஆஜர்படுத்தினர். அவருடன் சரவணன், சுரேந்திரனையும் போலீஸார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது தனது வீட்டுக்குச் செல்ல பவித்ரா மறுத்தார். இதையடுத்து அவரை ஹோமில் அடைக்க நீிதிபதி உத்தரவிட்டார்.