இறுதிக் காரியத்திற்கு பீரோவில் பணம் வைத்து விட்டு குடும்பத்தோடு தற்கொலை செய்த பெண் வங்கி மேலாளர்!
ஈரோடு அருகே பெண் வங்கி மேலாளர் தனது தாய் தந்தையுடன் தற்கொலை செய்து கொண்ட செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது.
ஈரோடு: இறுதிக் காரியம் செய்ய பீரோவில் பணத்தை வைத்து விட்டு தனது தாய், தந்தையுடன், ஒரு இளம் பெண் வங்கி மேலாளர் தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு அருகே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதை விட கொடுமை என்னவென்றால் அப்பெண்ணுக்கு திருமணம் பேசி முடிவெடுத்துள்ளனர். நிச்சயதார்த்ததிற்கு சில நாட்களே இருந்த நிலையில் இந்தத் தற்கொலை முடிவை அப்பெண் எடுத்துள்ளதுதான் மிகப் பெரிய சோகமாகும்.

ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன். இவரது மனைவி பெயர் ராதாமணி. இவர்களுக்கு ஒரே மகள் கிருத்திகா. 31 வயதான கிருத்திகா தனியார் வங்கி ஒன்றில் மேலாளராகப் பணியாற்றி வந்தார். இவர் பணியாற்றிய வங்கி திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் உள்ளது. மனோகரன் ஜவுளிக் கடையில் வேலை பார்த்து வந்தார்.
கிருத்திகாவுக்கும், பாலக்காட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயமாகியிருந்தது. 6ம் தேதி நிச்சயதார்த்தம் நடத்த முடிவாகி அதற்கான வேலைகளும் நடந்து வந்தன. இந்த நிலையில் கிருத்திகா தனது குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டு விட்டார். விஷம் அருந்திய நிலையில் 3 பேரும் வீட்டில் பிணமாகக் கிடந்தனர். சாவதற்கு முன்பு உறவினர்களுக்கு கடிதம் எழுதி வைத்திருந்தார் கிருத்திகா. அதில் பீரோவில் இறுதிக் காரியத்திற்குத் தேவையான பணம் உள்ளது என்று கூறப்பட்டிருந்தது. தங்களது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று இன்னொரு கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.
இந்தத் தற்கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. குடும்பத் தகராறா, கடன் தொல்லையா என்ன என்று தெரியவில்லை. போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications