கோவையில் தாய், மகள் அடுத்தடுத்து தற்கொலை.. நீண்ட நேர சண்டைக்குப் பின்னர் விபரீத முடிவு!
கோவை: தந்தையிடம் இருந்து விவாகரத்து வாங்க வேண்டாம் என தாயுடன் ஏற்பட்ட தகராறில், தாயும், மகளும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை கணபதி அருகேயுள்ள நல்லாம்பாளையம் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் இந்திராணி (42). இரத்தினபுரியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த இந்திராணி நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கணவரை பிரிந்து, மகள் சுவாதிகா (20)வுடன் வசித்து வந்தார். சுவாதிகா கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு இ.சி.இ படித்து வந்தார். மகன் ஜோகிந்தர்ராஜ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கணவரிடம் விவாகரத்து கோரி கோவை மாவட்ட நீதிமன்றத்தில் இந்திராணி வழக்குத் தொடர்ந்தார். ஆனால், இது சுவாதிகாவுக்கு பிடிக்கவில்லை. தந்தையுடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறு தாயாரிடம் அவர் வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தாய் - மகள் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், வழக்கம் போலவே நேற்று முன்தினம் இரவும் தாய்-மகள் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றவே இருவரும் தடித்த வார்த்தைகளால் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்.
இதில் மனவேதனையடைந்த இந்திராணி மகள் கண் எதிரிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுவாதிகா, சில நிமிடங்களிலேயே தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று காலை இந்திராணி வீட்டுக்கு வந்த உறவினர் ஒருவர், நீண்ட நேரமாக கதவு திறக்கப் படாததால் சந்தேகமடைந்தார். அக்கம்பக்கத்தார் உதவியுடன் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு தாயும், மகளும் தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
உடனடியாக இது தொடர்பாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்திராணிக்கும் அவரது உறவினருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகவும் தாயிற்கும், மகளுக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்ததாகத் தெரிகிறது. எனவே, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications