தவறான மருத்துவம்: குழந்தைப்பேறு சிகிச்சைக்காக சென்ற சென்னை பெண் பலி
சென்னை: குழந்தைபேறுக்காகச் சிகிச்சை பெற்ற இளம்பெண் டாக்டர்களின் தவறான மருத்துவத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை, சேலையூர் அக்ரகாரத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் மோகன் என்ற தனியார் கார் நிறுவன உதவி மேலாளரின் மனைவி ஹரினி நாச்சியார் (வயது 23). இவர் குழந்தை பேறுக்காக கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முந்தினம் சிகிச்சைக்காக அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப் பட்டுள்ளது. ஆனால், அவர் தொடர்ந்து மயக்கநிலையிலேயே இருந்து, கண் திறக்காமலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
நாச்சியார் உயிரிழந்த தகவல் அறிந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப் பட்ட மருத்துவமனை முன்பு அவரது உறவினர்கள் திரண்டனர். நாச்சியாருக்கு சிகிச்சை அளித்த டாக்டர் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் பணியாற்றி வருகிறார்.
தவறான சிகிச்சையால்தான் நாச்சியார் இறந்ததாகவும், இதனால் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய உறவினர்களை போலீசார் சமாதானப்படுத்தினர். பின்னர், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.
ராயப்பேட்டை மருத்துவ மனையில் டாக்டர்கள் குழு நாச்சியாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய இருக்கிறது. அதன் முடிவு வெளி வந்த பிறகு தவறான சிகிச்சையால் தான் நாச்சியார் உயிரிழந்தார் என தெரிய வந்தால், டாக்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications