'அம்மா'வுக்கு 4 ஆண்டு சிறை: டிவியில் நியூஸ் பார்த்த பெண், தொண்டர் மாரடைப்பால் மரணம்
திண்டுக்கல்: வத்தலகுண்டு அருகே சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்த பெண் மாரடைப்பால் மரணம் அடைந்தார். மேலும் அதிமுக தொண்டர் ஒருவரும் அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள சேவுகம்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட முத்துலாபுரத்தைச் சேர்ந்தவர் பாலம்மாள்(52). அவரது கணவர் கதிரவன் இறந்துவிட்டார். அவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சனிக்கிழமை சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்ட செய்தி தான் அனைத்து தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பானது.
இந்நிலையில் பாலம்மாளும் சனிக்கிழமை தொலைக்காட்சி முன்பு அமர்ந்து தீர்ப்பு பற்றிய செய்தியை பார்த்துக் கொண்டிருந்தார். ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொலைக்காட்சியில் பார்த்த அவர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்த விவரம் அறிந்த அதிமுகவினர் தலையில், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு அழுதனர். ஒரு சில இடங்களில் அதிமுக தொண்டர்கள் தற்கொலைக்கு முயன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே போன்று நாகை மாவட்டம் வேதாரண்யம் 20-வது வார்டைச் சேர்ந்த அதிமுக தொண்டர் கோவிந்தராஜ் என்பவர் ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை கிடைத்த அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.