சென்னை லாட்ஜில் பட்டதாரி இளம் பெண் படுகொலை.. தப்பியோடிய மர்ம நபர்கள் யார்?
மயிலாப்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றில் பட்டதாரி பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது நண்பரையும் மற்றொருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.
சென்னை: சென்னை, மயிலாப்பூரில் லாட்ஜ் ஒன்றின் அறைக்குள் இளம் பெண் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 15ம் தேதி நள்ளிரவில் மயிலாப்பூர் ஆர்.கே.மடம் சாலையிலுள்ள லாட்ஜ் ஒன்றின் அறைக்குள் இளம்பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் விரைந்து சென்று விசாரணையை தொடங்கினர்.

அப்போது, அந்த பெண், மயிலாப்பூர் பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்த எத்திராஜ் எனும் பழைய பேப்பர் கடை வைத்துள்ளவரின் மகள் என தெரியவந்தது. எத்திராஜுக்கு 3 மகள்கள் உள்ளனர். அதில் மூத்த மகள்தான் நிவேதா (22). பி.பி.ஏ பட்டதாரி என்பது தெரியவந்தது.
திருமணமாகாத நிவேதா, வேலை தேடிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 14ம் தேதி பகலில் நிவேதா வெளியில் செல்வதாக கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதன்பிறகு வீடு திரும்பவில்லை என்பதால் எத்திராஜ், நிவேதாவை காணவில்லை என்று மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே புகார் கொடுத்திருந்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
நிவேதாவுடன் வாலிபர் ஒருவர் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. அந்த வாலிபர் நிவேதாவின் காதலராக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அவரை காணவில்லை என்பதால் அவர் கொலை செய்து தப்பியோடிவிட்டார் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.
நிவேதாவின் கழுத்தில் காயம் இருப்பதால் இந்த சந்தேகம் வலுப்பெறுகிறது. லாட்ஜ் ரகசிய கேமராக்களை ஆய்வு செய்தபோது நிவேதா தங்கியிருந்த அறைக்குள் 2 வாலிபர்கள் சென்றது தெரியவந்தது. எனவே கொலையில் காதலனுடன் இன்னொரு நபருக்கும் தொடர்பிருக்கலாம் என தெரிகிறது. தப்பியோடிய வாலிபர்கள் பெங்களூரைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுவதால் போலீசார் அங்கும் விரைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications