பள்ளி மாணவி மீது ஒருதலைக்காதல்... கண்டித்த அம்மாவுக்கு அரிவாள் வெட்டு
சென்னை: தமிழகத்தில் ஒருதலைக்காதல் சம்பவங்களுக்கு பலியாகும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சிதம்பரம் அருகே 9ம் வகுப்பு பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்த வாலிபரை கண்டித்த பெண்ணிற்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிதம்பரம் காரியபெருமாள் கோவில் குளக்கரையில் வசிக்கும் கணபதி என்பவரது மகள், மேலவீதியில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார்,20 என்பவர் பின் தொடந்து வந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

கடந்த ஒருமாதகாலமாக அவரது தொந்தரவு நீடிக்கவே, இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் சம்பவத்தை கூறியுள்ளார். இதனை தொடர்ந்து சிதம்பரம் காவல் நிலையத்தில் செந்தில்குமார் மேல் புகார் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து காவல் துறையினர் செந்தில்குமாரை விசாரணை செய்து கண்டித்தனர்.
இதனை தொடர்ந்தும் திருந்தாத செந்தில்குமார் மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார். பின்னர் இதுகுறித்து பெற்றோர்கள் அவரிடம் நேரிடையாக கண்டித்துள்ளனர். அப்போதும் அதை பற்றி கண்டுக்கொள்ளாத செந்தில்குமார், மாணவியிடம் பள்ளி செல்லும் போது தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் பெற்றோர்கள் மாணவியை பள்ளியை விட்டு நிறுத்திவிட்டனர்.
மாணவியை விட்டைவிட்டு வெளியே அனுப்பாததால் ஆத்திரம் அடைந்த செந்தில்குமார் வியாழன் மாலை 7 மணியளவில் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது தாய் ஜெயா, 35விடம் நான் உன் மகளை காதலிக்கிறேன் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என சண்டை போட்டுள்ளார்.
இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் வாக்குவதம் முற்றி செந்தில்குமார் மாணவியின் தாய் ஜெயாவை அரிவாளால் சராமறியாக வெட்டியுள்ளார். வலியை பொறுத்துகொள்ள முடியாத அவர் தெருவிற்கு வந்து காப்பாத்துங்கள் என்று அபாயகுரல் எழுப்பிய போதும் அவரை விடாமல் தொடர்ந்து வந்து வெட்டியதால் ரத்தவெள்ளத்தில் கீழே விழுந்தார் ஜெயா.
ஜெயா இறந்து விட்டார் என்று கருதி செந்தில்குமார் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார். பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
கடந்த ஒருமாத காலமாகவே தமிழகத்தில் ஒருதலைக்காதல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் சிதம்பரத்தில் காதலிக்க மறுத்த பெண்ணின் தாயார் வெட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications