வரதட்சணைக்காக கருவை கலைத்த கணவன் –உண்ணாவிரதத்தில் குதித்த மனைவி!
சென்னை: சென்னையில் வரதட்சணை கேட்டு 3 மாத கருவை கலைத்த கணவரை கைது செய்யக்கோரி மனைவி உண்ணாவிரதம் இருந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை அரும்பாக்கம் விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் வைதேகி. இவருக்கும் அயனாவரம் கோயில் தெரு மேற்கு மாட வீதியை சேர்ந்த சாஃப்ட்வேர் என்ஜினீயரான ஜெகதீசுக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது வைதேகி குடும்பத்தினர், 47 பவுன் நகையை வரதட்சணையாக ஜெகதீசுக்கு கொடுத்தனர்.
இந்நிலையில் கூடுதலாக ரூபாய் 15 லட்சம் வரதட்சணை வாங்கி வரும்படி வைதேகியை கணவர் ஜெகதீஷ், மாமனார் ஆறுமுகம், மாமியார் சந்திரா ஆகியோர் கொடுமைப்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால் அவரது 3 மாத கரு கலைந்து விட்டது.
இவர்களது கொடுமையைத் தாங்க முடியாத வைதேகி, கணவரை விட்டு 6 மாதங்களுக்கு முன்பு பிரிந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
மேலும், கணவர் தன்னிடம் வரதட்சணைக் கேட்டு கொடுமை செய்தது குறித்து வைதேகி, அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி அவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி அயனாவரம் போலீஸார், ஜெகதீஷ் மற்றும் அவர் குடும்பத்தினர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் எதிரிகள் யாரையும் போலீஸார் கைது செய்யவில்லை. அதே நேரத்தில் ஜெகதீஷ் குடும்பத்தினர் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் வைதேகி, செவ்வாய்க்கிழமை நண்பகல் அயனாவரம் மகளிர் போலீஸ் நிலையம் சென்று தனது கணவர் குடும்பத்தினரை கைது செய்யும்படி கூறினார்.
அதைத் தொடர்ந்து வைதேகி, செவ்வாய்க்கிழமை இரவு கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை கைது செய்யக் கோரி அவர்களது வீட்டு முன்பு திடீரென அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். வைதேகியுடன் அவருடைய சகோதரர் விஸ்வநாதனும் இருந்தார். இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications