ஆத்திரத்தில் கீழே தள்ளியதில் மனைவி பலி: கணவன், மாமியார் தலைமறைவு
ஈரோடு: குடும்பத் தகராறில் மனைவியைக் கீழே தள்ளி, அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்த கணவனைப் போலீசார் தேடி வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகே உள்ள சோலார்புதூரைச் சேர்ந்த கோவிந்தராஜ் (23), கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதே பகுதியைச் சேர்ந்த பூர்ணிமா (19) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு, ஏழு மாதத்தில் கௌசிக் என்ற ஆண் குழந்தை உள்ளது.
சிறு வயதில் விபத்தொன்றில் காயமடைந்த பூர்ணிமாவுக்கு, தலையில் ஆபரேஷன் செய்யப்பட்டதால், அவருக்கு அவ்வப்போது வலிப்பு நோய் வருவது வழக்கமாம். இந்நிலையில் நேற்று மாலை கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
கோபத்தில் தனது மனைவியை கீழே பிடித்துத் தள்ளியுள்ளார் கோவிந்தராஜ். இதனால் தலையில் அடிபட்ட பூர்ணிமாவுக்கு வலிப்பு நோய் வந்துள்ளது. உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் பூர்ணிமா.
பூர்ணிமாவை பரிசோதித்த மருத்துவர்கள், உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரைத்துள்ளனர். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பூர்ணிமா பரிதாபமாக பலியானார்.
தகவலறிந்து விரைந்து வந்த பூர்ணிமாவின் உறவினர்கள் விசாரித்ததில், கோவிந்தராஜ் பூர்ணிமாவை பிடித்து கீழே தள்ளியது தெரிய வந்துள்ளது. பூர்ணிமாவின் உறவினர்களால் தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தில் கோவிந்தராஜ் மற்றும் அவரது தாயார் இருவரும் மருத்துவமனையிலிருந்து யாருக்கும் தெரியாமல் தலைமறைவாகி விட்டனர்.
திருமணமாகி இரண்டு ஆண்டுகளே ஆவதால், பூர்ணிமாவின் மரணம் குறித்து மொடக்குறிச்சி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications