குமரி அருகே 8 பவுன் நகைக்காக பெண் கொலை... 'விபசார தம்பதி' கைது
குமரி மாவட்டம் திருவட்டார் அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்து புதைத்த தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
திருவட்டார்: குமரி மாவட்டம், திருவட்டார் அருகே நகைக்காக பெண்ணை கொலை செய்து புதைத்ததாக தம்பதியை போலீஸார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் அருகே உள்ள பாரதப்பள்ளி இடைக்கினாவிளை பகுதியைச் சேர்ந்தவர் இன்னசென்ட் (46), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சசிகலா (36). இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். சசிகலா சுய உதவிக்குழு, தொண்டு நிறுவனங்களில் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்தார்.
கடந்த மாதம் 25-ஆம் தேதி சசிகலா, நாகர்கோவிலில் உள்ள தன்னுடைய தோழி கலாவை பார்ப்பதற்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு சென்றார்.

தகவல் இல்லை
அதன் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் இன்னசென்ட், சசிகலாவை பலஇடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து திருவட்டார் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சசிகலாவை தேடி வந்தனர்.

கலாவிடம் விசாரணை
இந்நிலையில் நாகர்கோவில் ஊட்டுவாழ்மடத்தில் உள்ள கலாவை (34) சசிகலா கடைசியாக சந்தித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரிடமும், அவரது கணவர் முருகேசனிடமும் போலீஸார் விசாரணையை தொடங்கினர். சசிகலாவிடம் இருந்த நகைக்கு ஆசைப்பட்டு அவரை கொலை செய்ததாக தம்பதி தெரிவித்தனர்.

வாக்குமூலத்தில் பகீர் தகவல்
கொலை தொடர்பாக போலீஸாரிடம் கலா தம்பதி அளித்த வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது : நாங்கள் இருவரும் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம். திருமணத்துக்கு பின்பு குமரி மாவட்டம் வந்து விட்டோம்.

விபசார தொழில்
அதிக பணம் சம்பாதிப்பதற்காக நாங்கள் இருவரும் சேர்ந்து விபசாரத் தொழிலை நடத்தினோம். குடும்ப பெண்களை மூளைச் சலவை செய்து அவர்களுக்கு பணத்தாசை காட்டி விபசாரத்தில் ஈடுபடுத்தினோம். இதனால் நாங்கள் அதிக பணம் சம்பாதித்தோம். இது வெளியே தெரியாமல் இருக்க எனது கணவர் ஆட்டோ ஓட்டும் தொழிலையும் செய்து வந்தார். போலீஸாரிடம் சிக்காமல் இருக்க வாடகைக்கு உள்ள வீட்டையும் அவ்வப்போது மாற்றி வந்தோம்.

நகை மீது ஆசை
இந்நிலையில் சசிகலாவுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரையும் விபசாரத்தில் ஈடுபடுத்தினோம். கடந்த மாதம் 25-ஆம் தேதி எங்களை தொடர்பு கொண்ட தொழிலதிபர் ஒருவர் விபசாரத்துக்கு பெண் கேட்டார். உடனே சசிகலாவை தொடர்பு கொண்டு நிறைய நகைகள் அணிந்து நல்ல அலங்காரத்தில் வருமாறு தெரிவித்தோம். அவரும் அதுபோன்ற வந்தார். பின்னர் அந்த தொழிலதிபர் சென்றவுடன் எங்களுக்கு சசிகலா அணிந்திருந்த நகைகள் மீது ஆசை ஏற்பட்டது.

வெட்டிக்கொலை
என் மனைவி கலாவுக்கு இதய நோய் உள்ளதால் சிகிச்சை அளிக்க சசிகலா அணிந்திருந்த நகைகள் அடகு வைக்க கேட்டோம். ஆனால் சசிகலா தர மறுத்ததோடு தகராறில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரமடைந்து அவரை அரிவாளால் வெட்டியதும் சம்பவ இடத்திலேயே அவர் இறந்துவிட்டார். வீட்டின் பின்புறம் அவரை குழித்தோண்டி புதைத்தோம். போலீஸார் தேடுவது தெரிந்து சடலத்தை தோண்டி வெளியே எடுத்து துண்டு துண்டாக வெட்டி பேரலில் போட்டு இட்டமொழி அருகே கொண்டுபோய் புதைத்தோம் என்று அவர்கள் வாக்குமூலத்தில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications