ரயிலில் வந்த 26 வயது பெண் துறவி பாதி வழியில் மாயம்.. என்ன நடந்தது?
சென்னை: திருச்சியிலிருந்து குஜராத் செல்வதற்காக சென்னைக்கு ரயிலில் வந்த இளம் பெண் துறவி வழியிலேயே மாயமாகி விட்டார். அவருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இதுகுறித்து அவர் சார்ந்த ஆசிரமம் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.
திருச்சி தொட்டியம் அருகே உள்ளது ஸ்ரீலலிதா மகிளா சமாஜம். இங்கு பெண் துறவியாக இருந்து வருபவர் விமலாம்பா (26). ஆசிரமத்திலேயே வளர்ந்து துறவு பணியில் ஈடுபட்டு வந்தவர் இவர். இவர், குஜராத்தில் உள்ள புஜ் ஆசிரமத்துக்கு செல்வதற்காக குளித்தலையில் இருந்து மேலும் சில பெண் துறவிகளுடன் மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னை வந்துள்ளார்.
இரவு 12 மணி வரை அனைவரும் ரயிலில் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் தூங்கியுள்ளனர். அதிகாலை 2 மணிக்கு மற்ற துறவிகள் எழுந்து பார்த்தபோது விமலாம்பாவை காணவில்லை. விழுப்புரம்- விருத்தாசலம் இடையேதான் விமலாம்பா காணாமல் போயிருக்கிறார். அவரது உடமைகள், செல்போன் எல்லாம் ரயிலில் இருந்தது. அவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை.
இதுகுறித்து ஆசிரமத் துணைத் தலைவர் சாம்பவி வித்யாம்பா ரயில்வே போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications