கொள்ளையனால் ஆசிரியை சாவு.. ரேஷன் கார்டுகளை தூக்கி எறிந்து பட்டினப்பாக்கம் பெண்கள் போராட்டம்
சென்னை: கொள்ளையர்களால் ஆசிரியை நந்தினி உயிர் போக காரணமாக இருந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பட்டினப்பாக்கத்தில் பெண்கள் திரளாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ரேஷன்கார்டுகளை தூக்கி எரிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டினப்பாக்கம் பகுதியிலுள்ள சீனிவாசபுரத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நந்தினி மற்றும் அவரின் தோழி லட்சு என்ற காயத்திரி ஆகியோர் பைக்கில் சென்றபோது கொள்ளையர்கள் பணத்தை பறிக்க மற்றொரு பைக்கில் விரட்டினர். இந்த களேபரத்தில் சிக்கி பைக்கில் இருந்து கீழே விழுந்த நந்தினி உயிரிழந்தார். கொள்ளையை தடுக்க முயன்ற சேகர் என்ற முதியவரும் தலையில் அடிபட்டு இறந்தார். காயத்திரி சிகிச்சை பெற்று தேறினார்.
இந்த சம்பவத்திற்கு காரணம், அப்பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைதான் என்பது மக்கள் குற்றச்சாட்டு. அந்த கடையை மூட நடவடிக்கை எடுக்குமாறு பல முறை கூறியும் கடை தொடருவதால் சமூக விரோதிகள் கூடாரமாக அப்பகுதி மாறியுள்ளது.
இதை கண்டித்து, பட்டினப்பாக்கம் ஏரியா பெண்கள் இன்று மதியம், டாஸ்மாக் கடை முன்பு திரண்டு பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடையை அவர்கள் அடித்து உடைத்துவிடுவார்கள் என்ற அச்சத்தால் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.
கோபமடைந்த பெண்கள் கொண்டுவந்திருந்த தங்கள் ரேஷன்கார்டுகளை கீழே எறிந்து ஆக்ரோஷம் வெளிப்படுத்தினர். இன்னும் எத்தனை உயிர் போக வேண்டும்.. என்று அவர்கள் போலீசாருடன் வாக்குவாதம் செய்தனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை போலீசார் வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.