வில்லுப் பாட்டு பாடி.. டாஸ்மாக் கடையைப் பூட்டி போராடிய பெண்கள்!
நெல்லை: நெல்லை அருகே டாஸ்மாக் கடையை மூடக் கோரி பெண்கள் நூதன முறையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே கீழப்பாவூர் ஊராட்சி ஓன்றியத்திற்கு உள்பட்ட திப்பணம்பட்டியில் இருந்து ஆவுடையனூர செல்லும் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது.
இந்த மதுக்கடையை நிரந்தரமாக மூட கோரி திப்பணப்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது பாணியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மாலையில் மதுவுக்கு எதிராக வில்லிசை பாடல்கள் பாடினர். இதில் அவர்கள் மது என்ற அரக்கனால் சீரழியும் குடும்பங்கள் குறித்து பேசினர். குழந்தைகளின் எதிர்காலம் கேள்வி குறியாவதை பற்றியும் பாடல்கள் மூலம் தெளிவுபடுத்தினர்.
இந்நிலையில் அதிரடியாக டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டத்தில் குதித்தனர். பல போராட்டங்கள் நடத்தியும் அரசு அதிகாரிகள் யாரும் வந்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை என்று பொது மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடையை மூடும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் உறுதியாக உள்ளனர்.