என் பாட்டில் குற்றமில்லை... தொடர்ந்து மக்களுக்காக பாடுவேன்: கோர்ட் வளாகத்தில் பாடகர் கோவன் ஆவேசம்
சென்னை: மக்களின் விடியலுக்காகத் தொடர்ந்து பாடுவேன் என டாஸ்மாக்கை மூடச்சொல்லி பாடியதற்காக கைது செய்யப்பட்டுள்ள மக்கள் கலை இலக்கியக் கழக கலைக் குழு பாடகர் கோவன் தெரிவித்துள்ளார்.
திருச்சி குழுமணி அருகேயுள்ள அரவானூரைச் சேர்ந்தவர் கோவன் (51). இவர் மக்கள் கலை இலக்கியக் கழக (மகஇக) கலைக் குழு மையப் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.

மது விலக்கை வலியுறுத்தி நடத்திவரும் கலை நிகழ்ச்சிகளில் கோவன் பாடிய "மூடு டாஸ்மாக்கை மூடு' என்ற பாடல் மிகவும் பிரபலமாகி வருகிறது. மேலும், இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களிலும் இந்தப் பாடல் பிரபலமாகி வருகிறது. இந்தப் பாடல் தமிழக முதல்வரை விமர்சிப்பதாக உள்ளதாகப் புகார் எழுந்தது.
கைது...
இதையடுத்து, கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு சென்னையிலிருந்து திருச்சி வந்த மத்திய குற்றப்பிரிவு போலீஸார், பாடகர் கோவனை அவரது வீட்டுக்குச் சென்று கைது செய்து சென்னைக்கு கொண்டு சென்றனர்.
விசாரணை...
ரசசிய இடத்தில் கோவனை போலீஸார் விசாரித்தனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையில் அடைத்தனர். அவர்மீது தேசத்துரோக வழக்கு மற்றும் இருபிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துவது, குற்றம் செய்ய தூண்டுவது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கோவனின் கைதிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். ஆங்காங்கே போராட்டங்களும் நடைபெற்று வருகிறது.
எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்...
இந்நிலையில், பாடகர் கோவனை போலீசார், எழும்பூர் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தினர். அப்போது பிரச்சினைக்குக் காரணமான தனது பாடலின் சில வரிகளைப் பாடினார் கோவன்.
தொடர்ந்து பாடுவேன்...
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், " ஒரு ரூபாய்க்கு இட்லி. ஐந்து ரூபாய்க்கு கழிப்பறை கட்டணம். நூறு ரூபாய்க்கு பருப்பு. லட்ச ரூபாய் தாண்டுகிற கல்விக் கட்டணம் என்று மக்களின் உணர்வுகளைத்தான் பாடலாக்கினேன். இன்னும் பாடவேண்டியவை நிறைய உள்ளன. என் பாட்டில் குற்றமில்லை. மக்கள் விடியலுக்காகப் பாடிக் கொண்டே இருப்பேன்" என்ரார்.
அதீதமான மொழி...
மேலும், "டாஸ்மாக் கொடுமையால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை, பெண்களை கேட்டால் அவர்களின் உணர்ச்சியின் வெளிப்பாடு அதீதமான மொழியாகவே கேட்கிறது.
பாதிக்கப்பட்ட பெண்களைக் கேளுங்கள்...
இந்த அரசு மக்களுக்கான அரசாகவே இருக்கிறது என்று சொல்கிறவர்களை, 'டாஸ்மாக் என்று ஒன்று தேவையா?' என பாதிக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போய் கேட்டுப் பார்க்க சொல்லுங்கள். அப்போதுதான் உண்மை தெரியும்.
எல்லாருக்குமான கோபம்...
இது ஒரு பொதுவான எல்லோருக்குமான கோபம். மக்களின் உணர்வுகளைத்தான் நான் வெளிக்கொண்டு வந்திருக்கிறேன்" என்று ஆவேசமாக அவர் கூறினார்.
போலீஸ் மனுத்தாக்கல்...
அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் கோவனை ஆஜர்படுத்திய போலீசார், அவரை போலீஸ் கஸ்டடியில் விசாரிக்க அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் கோவன் , "என்னை முழுமையாக போலீசார் விசாரித்து விட்டனர். பாடல், குறுந்தகடு குறித்தெல்லாம் தகவலை கேட்டு வாங்கி விட்டனர். புதிதாக விசாரிக்க தேவை ஒன்றும் இல்லை ஐயா " என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மீண்டும் புழல்...
இதனால், கோவனை போலீஸ் காவலில் மீண்டும் விசாரிக்க மாஜிஸ்திரேட் அனுமதி தரவில்லை. பின்னர் மீண்டும் அவர் புழல் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். கோவனின் ஜாமீனுக்கான மனுவை அவரின் வழக்கறிஞர் இன்று தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications