பாஜகவுடன் பாமக, தேமுதிக இணைந்தால் மகிழ்ச்சி: முதன் முறையாக மனம் திறந்த வைகோ
சென்னை: பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் இணைந்தால் மகிழ்ச்சிதான் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
மதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மதிமுகவைச் சேர்ந்த 1765 பேர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் மொத்தம் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ கூறியதாவது
பாஜக உடன் உடன்பாடு வைத்து நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறோம். அகாலிதளம் எப்படி பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளதோ அதேபோல நாங்கள் தமிழகத்தில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளோம்.
காங்கிரஸ் தமிழ் இனத்திற்கு விரோதமான அரசு. காங்கிரஸ் அரசு தொடரக்கூடாது. காங்கிரஸ் ஆதரவை பெறும் அரசும் அமையக்கூடாது. காங்கிரசை மத்திய அரசில் இருந்து அகற்ற வேண்டும்

ஊழலற்ற ஆட்சி அமையவேண்டும்
மத்தியில் ஊழலற்ற அரசு அமையவேண்டும். நிலக்கரி சுரங்க ஊழல், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஹெலிகாப்டர் ஊழல் என போபர்ஸ் போல பல ஊழல்கள் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்துள்ளன. ஊழலின் உற்றுக்கண்ணாக இருந்த காங்கிரஸ் அரசு இனி அமையக்கூடாது.

இனப்படுகொலைக்கு காரணம்
இந்திய அரசின் உதவியினால்தான் இலங்கையில் இனப் படுகொலை நிகழக் காரணம். இனி இந்த தேர்தலுக்குப் பின்னர் காங்கிரஸ் வரக்கூடாது. இந்த நிலைமை மாற வேண்டும்.

நம்பிக்கை இருக்கிறது
நரேந்திர மோடி பிரதமராக அமையும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்த அணுகுமுறையை மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இலங்கைப் பிரச்சினையில் வாஜ்பாஜ் பின்பற்றியதை நரேந்திர மோடி பின்பற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.

பாஜக மாநாட்டில்
இலங்கையில் நடைபெற்றது இனப்படுகொலை என்று மக்கள் தீர்ப்பாயம் தெரிவித்து விட்டது. இந்த தருணத்தில் இலங்கைக்கு உதவி செய்யக்கூடிய அரசு அமைய விடாமல் தடுப்பதே நமது நோக்கம். வரும் 8ந் தேதி வண்டலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் மதிமுக பங்கேற்கும்.

மோடி ஆதரவு அலை
மோடிக்கு ஆதரவு அலை பெருகிக்கொண்டே போகிறது. இந்தத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பாஜக வெற்றி பெறும் என்று தேனி மாவட்டத்தில் நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்கள் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கிராமங்களில் கூட மோடிக்கு ஆதரவு நிலவுகிறது.
நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக தமிழகத்தில் அதிமுக, திமுக என்ற அரசியல் வளையத்தை விட்டு வெளியே வருகிறது.

தேமுதிகவிற்கு அழைப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என்பது பற்றி இப்போதுதான் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
திமுக, காங்கிரஸ், அதிமுக இருக்கும் அணியில் நாங்கள் போகப் போவதில்லை. தேமுதிக கூட்டணிக்கு வந்தால் மகிழ்ச்சி வைகோ

40 தொகுதிகளில் வெற்றி
20 ஆண்டுகளாக சோதனைகளைக் கடந்து தலை நிமிர்ந்து நிற்கிறோம். நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோற்க வேண்டும். தேசியஜனநாயகக் கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற பாடுபடவேண்டும்

10 உறுப்பினர்கள்
தேமுதிக உடன் பாஜக தலைவர்கள் பேசுவார்கள். மதிமுக சார்பில் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு குறையாமல் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். அதற்கான பட்டியலை கொடுத்திருக்கிறோம். இறுதி முடிவு கூட்டணி உறுதியான பின்னர்தான் தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படும்.

இடிந்த கரையில் உண்ணாவிரதம்
இடிந்த கரையில் அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள போராட்டக்குழுவினருடன் 7ம் தேதி மதிமுக உண்ணாவிரதத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு வைகோ கூறினார்.












Click it and Unblock the Notifications