ஏற்காட்டில் கோலாகலம்.. பிரியாணி விருந்து.. சுண்டல் படையல்.. பொங்கலோ பொங்கல்.. ருசிகர காட்சிகள்!
ஏற்காடு: ஏற்காடு இடைத் தேர்தல் கோலாகலமாக நடந்துள்ளது. பல பகுதிகளில் ருசிகரமான காட்சிகளைக் காண நேர்ந்தது.
பெரும் ஆர்வத்துடன் வாக்காளர்கள் இடைத் தேர்தலில் வாக்களித்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வழக்கம் போல ஆண்களை விட பெண்கள் மத்தியில்தான் வாக்களிக்க ஆர்வம் அதிகம் காணப்பட்டது. காலையிலேயே குடும்பம் குடும்பமாக பலரும் வாக்களித்துச் சென்றனர்.

8 மணி முதல்
காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. தொடங்கியது முதலே விறுவிறுப்பாக நடந்தது வாக்குப்பதிவு.

சாரை சாரையாக
வாக்காளர்கள் சாரை சாரையாக பூத்துகளுக்குப் படையெடுத்து வந்தனர். ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் குவிந்ததாக செய்திகள் கூறுகின்றன.

முதியவர்களின் பேரார்வம்
முதிய வாக்காளர்கள்தான் வயோதிகம், உடல் தள்ளாமை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தனர். வலசையூரில் ஒரு தாத்தா மயங்கி விழுந்து விட்டார். அவருக்கு வட மாநில போலீஸ்காரர் ஒருவர் உதவி செய்து அவரை ஆறுதல்படுத்தினார்.

கையில் ஐடி.. இடுப்பில் குழந்தை
பல பெண்கள், கையில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இடுப்பில் கைக்குழந்தைகளுடன் வரிசையில் நின்றதைப் பார்க்க முடிந்தது.

சுண்டல் சாப்டுங்க.. பொங்கல் சாப்டுங்க
மேட்டுப்பட்டி தாதனூர் என்ற இடத்தில் சுவையான காட்சியைக் காண முடிந்தது. அதாவது அங்குள்ள அதிமுக பூத்தில், வாக்காளர்களுக்கு பூத்தில் வைத்தே சர்க்கரைப் பொங்கல், சுண்டல், டிபன் ஆகியவற்றை வழங்கி அசத்தினர் அதிமுகவினர். எதுக்கும் பயப்படவில்லை. யாரையும் கண்டு கொள்ளவில்லை.

அட கூட்டாத்துப்பட்டியில் பிரியாணி விருந்து
அதை விட மேலாக கூட்டாத்துப்பட்டி அருகே ஒரு கிராமத்தில் தோப்பில் வைத்து பிரியாணி விருந்தும் போட்டு அசத்தி விட்டனர் அதிமுகவினர். அந்த ஊர் மக்கள் அத்தனை பேரையும் தோப்புக்குள் கூட்டிச் சென்று வயிறார சாப்பிட வைத்தனராம்.












Click it and Unblock the Notifications