மதுக்கடைகளை கொண்டு வந்தது திமுக தான், ஆனால்...: கனிமொழி
திருவண்ணாமலை: திமுக தான் மதுக்கடைகளை கொண்டு வந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே திமுக அரசு மதுவிலக்கை கொண்டு வந்தது. அரசே மதுவை விற்பனை செய்யும் முறையை 2003ம் ஆண்டில் அறிமுகம் செய்தவர் ஜெயலலிதா என திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி ஆகியவற்றின் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில்,

வெற்றி
சட்டசபை தேர்தலில் திமுக தனித்து விடப்பட்டுவிட்டது என்கிறார்கள். தனியாக இருந்தாலும் நாம் தான் வெற்றி பெறப் போகிறோம். தனித்து நின்று வெற்றி பெறும் துணிச்சல் திமுகவுக்கு உள்ளது.

முதல்வர்
தமிழக முதல்வர் கோட்டைக்கு வருவது பத்திரிக்கைகளில் பெரிய செய்தியாக வருகிறது. திமுக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி தினமும் கோட்டைக்கு வருவார். தமிழகதத்தில் போராட்டம் நடத்தாதவர்களே இல்லை. இருப்பினும் எந்த போராட்டத்தையும் அரசு கண்டுகொள்வது இல்லை.

காணொலி
தமிழகத்தில் ஆட்சி அல்ல மாறாக காணொலி காட்சியே நடந்து வருகிறது. தேர்தல் நேரத்தில் மட்டுமே முதல்வரை பார்க்க முடியும். மற்ற நேரத்தில் அவரை காண்பது இயலாத காரியம்.

டாஸ்மாக்
நாட்டிலேயே தமிழகத்தில் தான் இளம் விதவைகள் அதிக அளவில் உள்ளனர். பாரம்பரியத்தை பற்றி பேசுகிறோமே நம் இளைஞர்கள் காலையில் எழுந்தவுடன் நேராக டாஸ்மாக் கடைக்கு செல்கிறார்கள். மதுக்கடைகளை மூடக் கோரி பெண்கள், மாணவர்கள் போராட்டம் நடத்தியும் அரசு கண்கொள்ளவில்லை.

மது
எந்த ஒரு கிராமத்திற்கு சென்றாலும் மதுக்கடையை மூட வையுங்கள் என்பது தான் மக்களின் முதல் கோரிக்கையாக உள்ளது. ஆனால் அது எல்லாம் ஜெயலலிதாவின் காதில் விழாது. திமுக தான் மதுக்கடைகளை கொண்டு வந்தது. ஆனால் சில ஆண்டுகளிலேயே திமுக அரசு மதுவிலக்கை கொண்டு வந்தது. அரசே மதுவை விற்பனை செய்யும் முறையை 2003ம் ஆண்டில் அறிமுகம் செய்தவர் ஜெயலலிதா.

பெண்கள்
தமிழக பெண்களை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சனையே மது தான். மது பழக்கத்தால் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகின்றனர். இதனால் பெண்கள் பயத்திலேயே வாழ்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகள் மூடப்படும்.












Click it and Unblock the Notifications