அனுமதியின்றி ஆளில்லா விமானம் பறக்கவிட்ட ஒய்ஜி மகேந்திரன் மகன் கைது
சென்னை: சென்னையில் அனுமதியின்றி ஆளில்லாத விமானத்தை பறக்கவிட்டதாக நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகனை போலீஸார் கைது செய்தனர்.
சென்னையில் ஆளில்லாத விமானம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆளில்லாத விமானம் பறக்க விடுகிறவர் காவல்துறை, விமானத்துறை உள்ளிட்ட துறைகளில் முறைப்படி அனுமதி பெற வேண்டும்.
இந்த நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையின் முகத்துவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் ஒரு நபர், ஆளில்லாத விமானத்தை ரிமோட் கண்ட்ரோல் மூலம் பறக்கவிட்டார்.
தகவலறிந்தகும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, அங்கு ஆளில்லாத விமானத்தைப் பறக்கவிட்டவரிடம் விசாரித்தனர். இதில் அவர், அந்த விமானத்தை பறக்கவிடுவதற்கு அனுமதி பெறவில்லை எனத் தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் கைது செய்து பட்டினப்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.ஆளில்லா விமானமும் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகன் ஹர்ஷா (30) என்பது தெரியவந்தது. விளம்பரப் படப்பிடிப்புக்காக அதை வாங்கியதாக போலீஸில் ஹர்ஷா தெரிவித்தார். ஹர்ஷாவின் முழுப்பெயர் ஹர்ஷவர்த்தனா என்பதாகும். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் பட்டினப்பாக்கம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.