சென்னை உடற்பயிற்சி கல்லூரி மாணவர்களும் போராட்டம்: போலீஸ் தடியடி- கல்லூரிக்கு லீவ்
சென்னை: அடிப்படை வசதிகளை மேம்படுத்தக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை உடற்பயிற்சி கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய மாணவர்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் போலீசாரால் தாக்கப்பட்டு, வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனால் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க கல்லூரிக்கு பத்து நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை நந்தனத்தில் ஒய்.எம்.சி.ஏ. உடற்கல்வியியல் கல்லூரி உள்ளது. 90 ஆண்டுகள் பழமையான இந்த கல்லூரியில் அடிப்படை வசதிகள் சரியாக இல்லை என்பது மாணவர்களின் புகாராகும். கல்லூரியிலும், விடுதியிலும் கழிவறை, குளியலறை உள்ளிட்டவை சரியாக இல்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு.

அடிப்படை வசதிகள்
சுத்தமான குடிநீர், மாணவர்கள், ஆசிரியர்கள் தங்கும் விடுதி அறைகளிலும் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் அடிப்படை வசதிகளைச் செய்ய போதிய நிதி இல்லை என்று இவர்களது கோரிக்கைகளை கல்லூரி நிர்வாகத்தினர் நிராகரித்து வந்துள்ளனர்.

உள்ளிருப்பு போராட்டம்
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் உறுதியாக போராட்டத்தில் ஈடுபட்டதைப்போல, உடற்பயிற்சி கல்லூரி மாணவர்களும் நேற்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து மாணவர் பிரதிநிதிகளுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை தோல்வி
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தால் சாலை மறியல் போராட்டம் நடத்துவோம் என்று, மாணவர் பிரதிநிதி செல்வம் நேற்று கூறினார். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால், மாலை 4 மணி அளவில் போராட்ட மாணவர்கள் மறியலுக்கு தயாரானார்கள்.

மறியலுக்கு தயார்
அவர்களுக்கு ஆதரவாக அகில இந்திய மாணவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் போராட்ட களத்திற்கு வந்தனர். அவர்கள் உடற்கல்வியியல் மாணவர்களை சாலை மறியலுக்கு அழைத்ததாக தெரிகிறது. இதனையடுத்து போராட்டம் நடந்த கல்லூரி வளாகத்தின் இரும்பு கதவை போலீசார் பூட்டினார்கள்.

போர்க்களம் போல
இதனையடுத்து உடற்கல்வியியல் மாணவர்கள் சாலை மறியலுக்காக கல்லூரி வாசலை தாண்ட முற்பட்டனர். அவர்களையும் தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். இதனால் அந்த இடம் போர்க்களம் போல மாறியது. பதற்றம் அதிகரிக்கவே ஏராளமான போலீசார் அங்கு பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர்.

குமுறிய மாணவர்கள்
கல்லூரியில் ஏராளமான மாணவர்கள் படித்து வரும் நிலையில் எந்த வித அடிப்படை வசதியும் இன்றி சிரமப்படுவதாகவும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட தங்களை போலீசார் அடித்து விரட்டியதாகவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

10 நாட்கள் விடுமுறை
இதற்கிடையில், 10 நாட்களுக்குள் கோரிக்கைகள் நிறைவேற்றிவைக்கப்படும் என்று நேற்று இரவு கல்லூரி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டது. 10 நாட்கள் கல்லூரிக்கும் விடுமுறை விடப்பட்டது. இதனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக போலீஸ் தரப்பில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாரிமுனையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது நேற்று முன்தினம் போலீசார் தடியடி நடத்தினர். இப்போது நந்தனம் கல்லூரி மாணவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications